Ad Widget

மூன்றாவது நாளாகத் தொடரும் நடைபயணம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து ஆரம்பமான நடைபயணம் இன்று 3 ஆம் நாள் பளையிலிருந்து தொடங்கியது.

palai-jaffna-1-day3-nadaipayanam

நேற்று வெள்ளிக்கிழமை ஆனையிறவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் பளையுடன் நிறைவு செய்யப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் பளையிலிருந்து யாழ். நோக்கிய பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய பயணத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோருடன், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்டோரும் பங்கெடுத்திருந்தனர்.

ஆரம்ப நிகழ்வில் கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், இன்றைய நடை பயணத்தின் முடிவு கொடிகாமம் பகுதி என தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமது மூன்றாம் நாள் பயணம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தம்முடன் அரசியல் கைதிகள் மற்றும் கோணாமல் போனோரின் உறவுகளும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தம்முடன் இணைந்துள்ளதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

நாளுக்கு நாள் புதியவர்கள் தமது பயணத்தில் இணைந்து கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், தமது பயணத்தின் போது மக்கள் பாரிய ஆதரவினை வழங்கி வருதாகக் கூறியுள்ளார்.

சிற்றுண்டிகள், குளிர்பானங்களை தமக்கு வழங்கி, மக்கள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும், தாம் இந்த பயணத்தினை வெற்றிகரமாக முடிப்போம் எனவும் அவர் கூறினார்.

Related Posts