Ad Widget

முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் :சுமந்திரன்

வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நீதிமன்றத்திற்கு நேற்று வந்த நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது 1957ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தில் இருந்து வருகின்ற ஒரு நிலைப்பாடு. அந்த ஒப்பந்தத்தில் கூட மாகாண எல்லைகளுக்கு அப்பால் பிராந்திய சபைகள் ஒன்று சேரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

2010ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் முன்வைத்து வருகின்ற எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று தெட்டத் தெளிவாக சொல்வதுடன் சேர்ந்து அந்த இணைப்பு கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் பூரண சம்ம தத்துடன் இடம்பெற வேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றோம்.

அதற்கும் அடிப்படையான சில காரணங்கள் உண்டு. இலங்கை தமிழரசுக் கட்சி 1949 டிசம்பர் 19ஆம் திகதி உருவாக்கப்பட்ட யாப்பிலேயே முஸ்லிம் மக்களும் ஒரு தேசத்திற்கு உரியவர்கள். அவர்களுக்கும் அந்த அடிப்படையில் சுயநிர்ணய உரித்து உண்டு என்பது எங்களாலே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயம்.

ஆகையினாலே வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும். மொழி வாரியான ஒரு அலகு உருவாக்கப்பட வேண்டும். தமிழ் பேசுகின்ற மக்களின் பிரதேசம் என்கின்ற ரீதியில் அது செய்யப்பட வேண்டும்.

ஆனால் அப்படி செய்யப்படுகின்ற போது தங்களுக்கு என்று ஒரு தனித்துவம் கொண்ட முஸ்லிம் மக்களினுடைய சம்மதத்தோடும் சேர்ந்து தான் அது செய்யப்பட வேண்டும்.

கடந்த 25 வருடமாக ஏற்பட்ட கசப்பான சில சம்பவங்களால் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள்.

ஆனால் நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்குரிய வேலைகளை செய்து வருகின்றோம் எனத் தெரிவித்தார்.

Related Posts