Ad Widget

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஸ்தூபி அமைக்கப்படும்

விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அப்படி கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்பப்படுவதை யாரும் எதிர்க்க முடியாது எனவும் அவர் கூறுகிறார்.

அடுத்த ஐந்து வருடங்களுக்குள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஒரு ஸ்தூபி அமைக்கப்படும் எனவும் அவர் உறுதியாத் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்றை எழுப்புவது தொடர்பில், தனக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்பட்டு பதவி பறிபோனாலும் அதுகுறித்து தான் கவலைப்படவில்லை எனவும் அமைச்சர் விஜயகலா கூறுகிறார்.

உயிரிழந்தவர்கள் நினைவாக அங்கு சென்று தீபங்களை ஏற்றுவதற்கு தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு எவ்விதத் தடையையும் ஏற்படுத்தாது எனவும் கூறும் அவர், அதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் கூறுகிறார்.

அங்கு நினைவு ஸ்தூபி எழுப்பப்படுவதில் வடமாகாண சபையின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் இருக்கும் ´நல்லாட்சிக்கான அரசாங்கத்தால்´ வட மாகாண சபைக்கு அதிகாரமும் நிதியும் வழங்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Posts