Ad Widget

முல்லையில் கடலுக்குச் சென்ற மீனவர்களைக் காணவில்லை!! மீனவர்கள் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 05.00 மணியளவில் கடலுக்குச் சென்ற நிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்படையினர் போன்றோருக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் அவர்கள் இது குறித்து எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதேவேளை, கடற்றொழில் அமைச்சரிடம் இது தொடர்பாக தெரியப்படுத்தியதுடன், அவரிடம் காணாமல் போன மீனவர்களைத் தேடுவதற்கு உலங்குவானூர்தி (கெலிஹாப்டர்) உதவியை கேட்டுள்ளதாகவும் இதுவரையில் கடற்றொழில் அமைச்சர் தரப்பிலிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், இன்றையதினம் முல்லைத்தீவு மீனவர்கள் அனைவரும் தாம் தொழிலுக்குச் செல்வதை நிறுத்தி, அதிகாலையிலேயே மீனவர்களைத் தேடுவதற்குப் புறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் காணாமல் போன மீனவர்களை மீட்டெடுக்க கடற்றொழில் அமைச்சு, நீரியல்வளத் திணைக்களம், கடற்படை என்பன தமக்கு உதவ முன்வரவேண்டுமெனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts