Ad Widget

முல்லைத்தீவில் குளங்களின் நீர்மட்டம் குறைவு : மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவில் குளங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதனால் விவசாயம் நன்னீர் மீன்பிடி நிலத்தடி நீர், விலங்குகளுக்கான குடிநீர், உள்ளிட்ட நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனா்.

முல்லைத்தீவின் முக்கிய குளங்களான முத்தையன்கட்டுக் குளம், வவுனிக்குளம் என்பவற்றின் நீர் மட்டம் அடிநிலையினைச் சென்றடைந்துள்ளதன் காரணமாக இக்குளங்களின் கீழான விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது

அத்தோடு இக்குளங்களை நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேலான நன்னீர் மீன்பிடி குடும்பங்கள் வறுமை நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திலே தொடர்கின்ற வறட்சி காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் கீழ் நிலையினைச் சென்றடைந்திருப்பதன் காரணமாக நன்னீர் மீன்பிடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன் கால்நடைகளும் குடிநீருக்கு அலைகின்ற அவலம் காணப்படுகின்றது.

இந்நிலையில் இக்குளங்களில் பிடிக்கின்ற மீன்களை நம்பி பல குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக குளங்களில் இருந்து மீன்களை பிடிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.

சிறுபோக நெற்செய்கை கைவிடப்பட்டுள்ளது. நன்னீர் மீன் பிடி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல குடும்பங்கள் வறுமை நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளதுடன் காரணமாக வறட்சி நிவாரணத்தினை வழங்குவதற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Related Posts