Ad Widget

முல்லைத்தீவில் அடையாளம் காணப்பட்டவரில் கண்டறியப்பட்ட வைரஸ் வீரியம்மிக்கது!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் மிக்கதாகக் காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனால், குறித்த தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண கொரோனா நிலைமை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே வைத்தியர் கேதீஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நேற்று (சனிக்கிழமை) யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 37 வயதுடைய ஆணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இவர், தம்புள்ளை சந்தைக்குச் சென்று மரக்கறிகளைக் கொள்வனவு செய்துவந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்குயிருப்புப் பிரதேசத்தில் எழுமாற்றாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் குறித்த பகுதியில் பல மக்களோடு தொடர்பில் இருந்துள்ளார்.

எங்களுக்குக் கிடைத்த ஆய்வுகூட முடிவுகளைப் பார்க்கின்றபோது அவருக்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா மிகவும் வீரியமானதாக இருக்கின்றது. எனவே, அவரில் இருந்து பலருக்குத் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இதனால், அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பரிசோதனைகளை முன்னெடுப்பதன் மூலம் உங்களது பிரதேசத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

இதனைப் போன்றே வடக்கு மாகாணத்தில் இருக்கும் அனைத்து மக்களும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களோடு தொடர்புகளை மேற்கொண்டிருந்தால் உடனடியாக உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்பினை மேற்கொண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் வடக்கு மாகாணத்தில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts