Ad Widget

முன்னாள் போராளி சுட்டுக்கொலை; இராணுவத்தினரே பொறுப்பு – கூட்டமைப்பு கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரும் இரு பிள்ளைகளின் தந்தையுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் என்று சொல்லப்படுவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

suresh

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில் –

மன்னார் – வெள்ளாங்குளம் இராணுவத்தினரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பிரதேசத்தில் எமது கட்சியின் தீவிர ஆதரவாளரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் இனந்தெரியாத நபர்கள் என்று கூறப்படுவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

எனவே, இந்தச் சம்பவத்துக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். குற்றவாளிகளை அரசு உடன் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தவேண்டும். ஆனால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே. இந்தக் கொடூர சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

naguleswaran naguleswaran-family

நகுலேஸ்வரனின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நகுலேஸ்வரனின் படுகொலையால் முன்னாள் போராளிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. விசா ரணை இடம்பெற்று வருகின்ற நிலையில், வடக்கில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் – என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கூட்டமைப்பின் எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் நடைபெற்ற வீடமைப்பு -பொறியியல் – நிர்மாணத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியுள்ளார்.

அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர் எனவும், நேற்றுமுன்தினம் மன்னாரில் ஒரு முன்னாள் போராளி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்றும் சபையில் ஆளுந்தரப்பினரைப் பார்த்து செல்வம் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் என்று சொல்லப்படுவர்களினால் கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது தெரிந்ததே.

Related Posts