முன்னாள் போராளிகளை பரிசோதிக்க அமெரிக்க மருத்துவக்குழு மறுப்பு

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை மருத்துவக்குழு முன்னாள் போராளின் உடல்நிலையைப் பரிசோதிக்க மறுத்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தடுப்பு முகாம்களில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி மற்றும் விசம் கலந்த உணவு வழங்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், 59 ஆவது வடமாகாண சபை அமர்வின்போது முன்னாள் போராளிகளின் ஒரு குழுவினரை பரிசோதிப்பதற்கு அமெரிக்க மருத்துவக்குழு இணங்கியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

எனினும் அமெரிக்க மருத்துவக்குழுவின் மருத்துவ முகாம் நிறைவடையயுள்ள தருணத்தில், முன்னாள் போராளிகளின் உடல் நிலையைப் பரிசோதிப்பதற்கான மருத்துவ வசதியுடன் தாங்கள் வருகைதரவில்லை என அமெரிக்க மருத்துவக் குழு தெரிவித்துள்ளதோடு, பரிசோதனையை மேற்கொள்ள மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முதலமைச்சர் அலுவலகத்தில் கடந்த இரு நாட்களில் மருத்துவப் பரிசோதனைக்காக 14 பேர் தங்களைப் பதிவு செய்துள்ளதாக வட மாகாண முதலமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளை வட பகுதியிலுள்ள நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள் மேற்கொள்வார்கள் எனவும் முதலமைச்சரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் பரிசோதனை செய்ய விரும்புகின்ற முன்னாள் போராளிகள் தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Posts