Ad Widget

முதியவரின் மோதிரங்களை அபகரித்துத் தப்பிக்க முயன்ற கர்ப்பவதிப் பெண் கைது!

தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த முதியவரின் மோதிரங்கள் இரண்டை கொள்ளையடித்துத் தப்பிக்க முயன்ற கர்ப்பவதிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்லிப்பளை வைத்தியசாலையில் இடம்பெறும் மாதாந்த சிகிச்சைக்காக நேற்றைய தினம் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அந்தவேளை வைத்தியசாலையில் வெள்ளை உடுப்புடன் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்கே நின்று முதியவரை அழைத்துச் சென்றுள்ளார்.

அதனை அவதானித்த பலரும் வைத்தியசாலைப் பணியாளரே அழைத்துச் செல்வதாக எண்ணியுள்ளனர். இந்நிலையில் முதியவரை அழைத்துச் சென்ற கர்ப்பவதி, முதியவரின் கைளில் இருந்த தங்க மோதிரங்கள் இரண்டையும் அபகரித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார்.

முதியவர் குரல் எழுப்பிய நிலையில் குறித்த கர்ப்பவதி வேகமாக வெளியேறி வீதியால் பயணித்த பேருந்தில் ஏறித் தப்பியுள்ளார். இதனையடுத்து முதியவர் அங்கு நின்றவர்களின் உதவியை நாடியுள்ளார்.

இதனையடுத்து அங்கே நின்ற சில இளைஞர்கள் பேருந்தை விரட்டிப் பிடித்து அந்தப் பெண்ணை மடக்கினர்.

இணுவிலைச் சேர்ந்த அந்தப் பெண்ணை வைத்தியசாலைப் பொலிஸார் கைது செய்த நிலையில் முதியவரின் தங்க மோதிரங்கள் இரண்டும் மீட்கப்பட்டன.
பெண் தெல்லிப்பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Related Posts