Ad Widget

முதலில் பிஸ்கெட் பிறகு கைவிலங்கு- கடற்படையின் வினோதக் கைது

நாங்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டு நிற்கும் போது இலங்கை கடற்படையினர் முதலில் வந்து எங்களுக்கு பிஸ்கெட் கொடுத்து விட்டு எம்மிடமுள்ள மீன்களை வாங்கிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து வந்த அதே கடற்படையினர் தம்மை கைது செய்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.

எல்லைதாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 21பேர் நேற்று இரவு பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை கடற்றொழில் நீரியல் வளதிணைக்கள அதிகாரிகளிடம் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர் இதன் போது கருத்து தெரிவித்த மீனவர்கள், நாங்கள் அனைவரும் நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியினைச் சேர்ந்தவர்கள். நேற்று இரவு நாங்கள் 23 பேர் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தோம்.

அப்போது இலங்கை கடற்படையினர் நாங்கள் மீன்பிடிக்கும் இடத்திற்கு வந்து தங்களிடம் உள்ள பிஸ்கெட்டுக்களை கொடுத்து விட்டு எங்களிடம் உள்ள மீன்களை வாங்கிச் சென்றனர்.

சிறிது நேரம் கழித்து குறித்த இடத்திற்கு வந்த அதேகடற்படையினர் எங்களுடைய படகுகள் மீது மோதினார்கள் இதன் காரணமாக எங்களுடன் 2 சிறிய படகுகள் உடைந்து விட்டது. அதில் இருந்த 2 பேரும் என்ன ஆனார்கள் என்று எங்களுக்கு தெரியாது.பின்னர் எங்கள் 21 பேரையும் கைது செய்தார்கள்.

அத்துடன் எங்களிடம் ஜீ.பி.எஸ் கருவிகள் இல்லை, இதன் காரணமாக திசை மாறி இலங்கை கடலுக்குள் நுழைந்து விட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்படும் போது தம்மிடம் 20 லட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் தம்மிடம் இருந்ததாக தெரிவித்தனர்.

Related Posts