Ad Widget

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சியினால் கூட்டமைப்புக்கு பாதிப்பு இல்லை!!!!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அடுத்த மாகாண சபை தேர்தலை எதிர் கொள்வதற்காக புதிய கட்சியை அமைக்க விரும்பினால் அமைக்கலாம். இச்செயற்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பாதிக்காதென,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள யூ.எஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“வடமாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்பது தீர்மானிக்கப்படும்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பெருந்தொகையான வாக்குகளை பெற்ற முதன்மை கட்சியாகும். இதனால் எந்நேரமும் தேர்தலை பற்றி மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. மக்கள் பிரச்சினைகள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கால கட்சி ரெலோ கட்சி என்றதன் அடிப்படையில் வரும் மாகாண சபை தேர்தல் தொடர்பிலும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும்.

வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விரும்பினால் புதிய கட்சி அமைக்க முடியும். அது தொடர்பில் கூட்டமைப்புக்கு எந்ததொரு கவலையும் இல்லை.

இதனால் தேர்தல் வரும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் ரெலோவின் ஆதிக்கம் இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

Related Posts