Ad Widget

முதலமைச்சர் சி.விக்கு எதிரான மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

vickneswaranமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை எதிர்த்து வட மாகாண பிரதம செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை மீறல் மனு மீது தீர்ப்பு வழங்குவதை உயர்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை ஒத்திவைத்தது.

இந்த மனுமீதான தீர்ப்பு நேற்று (30ஆம் திகதி) வழக்கப்படும் என்று ஜூலை 28ஆம் திகதி திங்கட்கிழமை (28) உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே மனுமீதான தீர்ப்பு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படும் என்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நேற்று(30) அறிவித்தார்.

தனது வேலையில் தலையிடுகிறார் எனவும் தன்னை வேலையிலிருந்து நீக்க முயற்சி செய்கிறார் எனவும் கூறி முதலமைச்சர் விக்னேஸ்ரனுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வட மாகாண முதலமைச்சரினால், வட மாகாண நிர்வாக நடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம் தனது உரித்துக்கள் பறிக்கப்படுவதாக பிரதம செயலாளர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க மற்றும் பி.பீ. அலுவிகார கொண்ட குழுமத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டிருந்து.

வட மாகாண பிரதம செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமியால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படபோது, முதலமைச்சரினால் விடுக்கப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் அன்று தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் மாகாணத்தின் நல்லாட்சியை மனதில் கொண்டு ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் வழியாக, நட்புறவு ரீதியாக இணைந்து வேலைசெய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றம் ஜூலை 14ஆம் திகதி கோரியிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் எண்ணத்தை வடமாகாண நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வழக்குரைஞர்களிடம் அன்றையதினம் கேட்டிருந்தார்.

இதனை தத்தம் தரப்பினரிடம் பேசி அடுத்த தவணையின்போது ஒரு நட்பு ரீதியான தீர்வுடன் வருமாறுமாறும் பிரதம நீதியரசர், வழக்குரஞ்சர்களிடம் கேட்டிருந்தார்.

இந்நிலையில், சுற்றறிக்கையை விளக்கிகொள்வதாக முதலமைச்சர், சத்தியக்கடதாசி ஊடாக மன்றுக்கு அறிவித்துள்ளார் என்று அவர் சார்பில் ஆஜராகியிருந்த வழக்குரைஞர்கள் (ஜூலை 14ஆம் திகதி) மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனிடையே குறுக்கிட்ட மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த சுற்றறிக்கையை முறைப்படி வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று சுட்டிக்காட்டினர். அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த, முதலமைச்சர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் சத்தியக்கடதாசி மூலமாக வாபஸ்பெற்றுவிட்டோம் என்றனர்.

இதனையடுத்தே, பிரதம நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் வழக்கு விசாரணையை ஜூலை 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அன்று விசாரணைக்கு எடுத்துகொண்டபோது மனுமீதான தீர்ப்பை 30ஆம் திகதி புதன்கிழமை (நேற்று) வழங்குவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts