யாழ்ப்பாணம் திருநகர் பரராஜசிங்கம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை பெற்றோல் ஊற்றி எரித்த குற்றச்சாட்டில் அதேயிடத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை(31) கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான முச்சக்கரவண்டி, செவ்வாய்க்கிழமை(31) அதிகாலை பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முச்சக்கரவண்டியின் உரிமையாளர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக முச்சக்கரவண்டி எரிக்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்.