Ad Widget

மீள் குடியமர்த்தக் கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்

protest-arpaddam-stopயுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற கோரி நாளை வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் கிளிநொச்சி கச்சேரி முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களது வீடுகளையும், பொது நிலையங்களையும் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளதால் இடம்பெயர்ந்துள்ள நூற்றுக் கணக்கான குடும்பங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாதுள்ளனர்.

பல ஆண்டுகளாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். இம் மக்களின் மீள் குடியமர்வை வலியுறுத்தி கடந்த மே 28ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நடாத்தியிருந்தோம். எனினும் இன்றுவரை அம் மக்களின் மீள் குடியமர்வு தொடர்பாக எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் பரவிப்பாஞ்சான் உட்பட இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்குச் சொந்தமான காணிகள், வீடுகளில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து உடனடியாக வெளியேறுவதுடன், அந்த வீடுகளையும், நிலங்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும், இது தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது. இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

Related Posts