Ad Widget

மீள்குடியேற்றமும் இல்லை அபிவிருத்தியும் இல்லை – சிறிதரன்

போர் முடிவுக்கு வந்த பின்னரும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றங்கள் இதுவரை பூரணப்படுத்தப்படவில்லை. போரால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான அபிவிருத்திகளும் முழு அளவில் மக்களைச் சென்றடையவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டில் இயங்கும் புலம்பெயர் மக்களின் அமைப்பான அன்னை திரேசா நற்பணி மன்றம், யாழ்ப்பாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை வழங்கிய நிகழ்வு யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் திங்கட்கிழமை (20) நடைபெற்றது.

அன்னை திரேசா அமைப்பின் தலைவர் சி.காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சிறிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

போரினால் பாதிக்கப்பட்ட ஏராளமான குடும்பங்கள் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். வீட்டுத்திட்டம், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு உட்பட பல விடயங்களில் மக்கள் பழிவாங்கப்பட்டுள்ளார்கள்.

சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பங்களுக்கு இன்றுவரை விடிவுகாலம் பிறக்கவில்லை.

காணாமல் ஆக்கச் செய்யப்பட்டவர்கள் பற்றி இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்னும் துயரோடு வாழும் மக்களுக்கு இப்படியான உதவிகள் ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகின்றன என்றார்.

Related Posts