Ad Widget

மீண்டும் காவல்துறையின் அடாவடி, சங்கானையில் இளைஞன்மீது தாக்குதல்!

கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் காவல்துறையினரால் இரண்டு இளைஞர்கள் படுகொலைசெய்யப்பட்டு அதன் பதற்றம் தணிவதற்குள் நேற்று முன்தினம் சங்கானையில் இளைஞன் ஒருவர் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

யாழ்.ஆஸ்பத்திரி வீதி சங்கானை பகுதியைச் சேர்ந்த தர்மபாலன் சுகிர்தன் (வயது – 25) என்ற இளைஞனை, கோப்பாய் டிப்போவிற்கும் உரும்பிராய் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து காவல்துறையினர் தாக்கியதாக கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

உந்துருளியில் வருகை தந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரும், பரிசோதகர் ஒருவரும் காரணமின்றி மோசமாகத் தாக்கியதாக முறைப்பாடு செய்த இளைஞன், நேரில் பார்த்தால் அவர்களை அடையாளம் காட்டமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு சிவில் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படவேண்டுமென தொடர்ச்சியாக குரல்கொடுத்துவரும் மக்களுக்கு காவல்துறையின் இச்செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts