உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 06.21 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு பதவி பிரமாணம் செய்துகொண்டார்.
இதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, “அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுடன் உரிமைகள் பேணப்படும் வகையில் இந்த தாய் நாடு அபிவிருத்தி நோக்கி கொண்டுசெல்லப்படும்.
என்னை பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் இந்த நடவடிக்கையில், ஊழல் மோசடிகளை ஒழித்து, நாட்டுக்காக பாடுபடும் அரசியல் தலைமைகளை உருவாக்கும் பணிகளில் என்னை ஈடுபடுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்.” என்றுள்ளார்.