Ad Widget

தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்தால் ஆதிக்கத்தினை கைப்பற்ற முடியும் : முதலமைச்சர் சீ.வி

தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து எமது ஆதிக்கத்தினை செலுத்தினால், பொலிஸ் அதிகாரத்தினை நாம் கையில் எடுக்க முடியும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சேவைக்காக 500 விண்ணப்பங்கள் உள்ளன.

அவற்றில் இணைந்துகொள்வதற்கு எமது தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சருக்கும், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முதலமைச்சர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (14) சந்திப்பு இடம்பெற்றது.

அந்த சந்திப்பின் போது, அண்மையில், மணற்காட்டில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர் மீதான துப்பாக்கிச் சூடு மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டன.

அதன்போது, பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர் யுவதிகளின் ஆளணிப் பற்றாக்குறையாக உள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா குற்றஞ்சாட்டியுள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் பொலிஸார், பொலிஸ் சேவையில் இணைக்கப்பட வேண்டும்.

பொலிஸ் சேவையில் இணைவதற்கு தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வரவில்லை.

பொலிஸ் சேவையில் தெற்கில் உள்ளவர்களை அனுமதிப்பதனால், பாதிப்பு எமக்கு தான். இதுவரை காலமும் பொலிஸ் மீதான அபிப்பிராயம் தப்பாக இருந்ததுள்ளது இது போருடன் சம்பந்தப்பட்டதாக இருந்தது.

ஆனால், தற்போது, பொலிஸ் அதிகாரம் எமது கையில் வர வேண்டுமென்றால், எமது இளைஞர்கள் பொலிஸ் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ளும் இடத்தில் இருக்க வேண்டும். தமிழ் பொலிஸாரின் எண்ணிக்கைகளை கூட்டினால், இங்குள்ள சிங்கள பொலிஸாரின் எண்ணிக்கையினை குறைக்க முடியும்.

எமது எண்ணிக்கையினை அதிகரித்தால், எமது ஆதிக்கத்தினை செலுத்த முடியுமென எமது இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

தற்போது 500 விண்ணப்பங்கள் இருப்பதாகவும், அந்த விண்ணப்ப படிவங்களை வைத்து பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை எமது இளைஞர் மற்றும் யுவதிகள் எடுக்க வேண்டும்.

வேலையற்ற பட்டதாரிகள் கூட உயர் பதவிகளை வகிப்பதற்காக முன்வர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளதுடன், இந்த விண்ணப்பங்களை பூரணப்படுத்த முன்வர வேண்டுமென்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts