மாவீரர் நிகழ்வில் சிறுவர்களை போராளிகளாக காட்சிப்படுத்தியமை வெறுக்கத்தக்கது – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

வடக்கில் மாவீரர் நிகழ்வில் சிறுவர்களுக்கு போராளிகளை போல் ஆடையணிந்து ,அவர்களின் கழுத்தில் சைனைட் குப்பிகளை அணிந்தமை முற்றிலும் வெறுத்தக்கத்ததொரு செயற்பாடு. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை இனியாவது தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர்,சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மகனாகவும்,கணவனாகவும்,சகோதரனாகவும்,இரு பிள்ளைகளின் தந்தையாகவும், நாட்டு பிரஜையாகவும் இந்த விவாதத்தில் உரையாற்றுகிறேன்.கிரிக்கெட் தொடர்பில் மாத்திரம் அதிகம் பேசப்படுகிறது.ஆனால் கிரிக்கெட்டை காட்டிலும் பல முக்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கல்முனை பகுதியில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் 15 வயது சிறுவன் அந்த நிலையத்தின் கட்டுப்பாட்டாளரினால் மிக கொடுமையான நிலையில் தாக்கப்பட்டதை தொடர்ந்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.இந்த செய்தியை அறிந்து மனவேதனையடைந்தேன்.

கடந்த மாதம் மாத்திரம் 16 வயதுக்கு குறைவான 131 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோக கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.இவர்களில் 10 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.இவ்விரு செய்திகளும் மிகவும் கொடுமையானது.

கடந்த வாரம் வடக்கில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. விடுதலை புலிகள் அமைப்பின் சீறுடைக்கு ஒத்த சீறுடைகளை சிறுவர்களுக்கு அணிந்து அவர்களின் கழுத்தில் சைனட் குப்பிகளை அணிவிப்பதையும் காண முடிந்தது. இது முற்றிலும் வெறுக்கத்தக்கதொரு செயற்பாடு. யுத்தக் காலத்தில் பல சிறுவர்கள் போராளிகளாக்கப்பட்டுள்ளார்கள்.அந்த நினைவுகளை மீட்கும் வகையில் செயற்படுவது முறையற்றது.

அரசியலமைப்பின் சமவுரிமை, பெண் சமத்துவம் தொடர்பில் பேசப்படுகிறது. ஆனால் பாரம்பரிய சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுவதால் பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்படுவதில்லை. அனுதாரபுரத்திலும்,கண்டியிலும் மாவட்ட செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படவில்லை. பத்தினி தெய்வம் ஒரு பெண் ஆனால் கோயில் கருவறைக்குள் செல்வதற்கு பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்த நிலைமை மாற்றடைய வேண்டும்.

முப்படைகளில் பெண்கள் உள்ளார்கள். கடற்படையில் இதுவரை காலமும் ஆண்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட பதவி நிலை தற்போது பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.இராணுவத்தில் பெண்கள் 40 அல்லது 20 வருடங்கள் சேவையில் இருக்க முடியும்.இராணுவத்தில் மேஜர் பதவி மாத்திரம் பெண்களுக்கு வழங்கப்படும்.இந்த நிலைமையை மாற்றியமைக்க சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது என்றார்.

Related Posts