Ad Widget

மானிப்பாய் வயோதிபப் பெண் படுகொலை சந்தேக நபருக்கு விடுதலை!

மானிப்பாய் பகுதியில் வயோதிபப் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபரை குற்றமற்றவர் என தெரிவித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்டவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கும் இந்தக் கொலைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும் கொலைச் சம்பவ தினத்தன்று கொலையாளி வீட்டுக்குள் நுழைவது, வீட்டிலிருந்து வெளியேறுவது என்பன பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளது. அந்த நபர் இவர் இல்லை என்பது தெட்டத் தெளிவாக அதில் தெரிகிறது. எனவே சந்தேகநபரை வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டும் என சட்டத்தரணி மன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சந்தேகநபருக்கு எதிரான சாட்சியங்களை பொலிஸார் மன்றில் சமர்பிற்காத நிலையில் நீதவான் குறித்த சந்தேகநபரை விடுதலை செய்தார்.

மானிப்பாய் கல்லூரி ஒழுங்கையில் நாகரத்தினம் குமராசாமி (வயது-88) என்பவரது வீட்டில் வைத்து அவரை பராமரிப்பதற்கு பணிக்கு அமர்த்தப்பட்ட வயோதிபப் பெண் கடந்த மாதம் 28 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

மானிப்பாய், சங்கபிள்ளை வீதியைச் சேர்ந்த தம்பையா லீலாதேவி (வயது -60) என்ற வயோதிப் பெண்ணே கொலை செய்யப்பட்டார். கொலையாளி முதலில் யாசகம் கேட்பது போல் வந்த போது அவருக்கு தர்மம் வழங்கப்பட்டது. சில நிமிடங்களில் பின்னர் மீண்டும் அந்த வீட்டுக்குள் புகுந்த கொலையாளி பெண்ணை கொலை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஆனைக்கோட்டைப் பகுதியில் நடமாடிய மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில் குறித்த நபரை இன்று நீதவான் குற்றமற்றவர் என தெரிவித்து விடுதலை செய்துள்ளார்.

Related Posts