புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்யா கோரமாகக் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு சாவுத் தண்டனை வழங்கக் கோரியும் வடமாகாணம் முழுவதும் பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடகச் செய்தியில்,
காலம் காலமாக எமது உறவுகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் சர்வசாதாரணமான விடயமாகி விட்டதோடு குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படவும் இல்லை.
கொடுமைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமுகமாக எதிர்வரும் 20 ஆந் திகதி புதன் கிழமை வடமாகாணத்தில் உள்ள அத்தனை அரச, அரசசார்பற்ற ஊழியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதோடு வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள அமைதி ஒன்றுகூடலில் மதகுருமார், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், ஆசிரிய கலாசாலை, கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வர்த்தகப்பெருமக்கள், இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய நாள் துக்கம் தோய்ந்த நாளாக பிரகடனப் படுத்துமாறு வடமாகாண முதலமைச்சரிடம் கோரிக்கையையும் முன்வைத்துள்ளது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.