Ad Widget

மாணவியை துன்புறுத்திய அதிபர், ஆசிரியரிடம் விசாரணை

சிறுப்பிட்டியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 5 மாணவியொருவரை அடித்து துன்புறுத்தியமை தொடர்பில் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரிடம் செவ்வாய்க்கிழமை (31) விசாரணை நடத்தியதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை ஆசிரியர் ஒருவர் தினந்தோறும் தன்னை அடித்துத் துன்புறுத்துவதால் தான் இனிமேல் பாடசாலைக்குச் செல்லமாட்டேன் என அம்மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

பெற்றோர் பழைய மாணவர் சங்கத்திடம் முறையிட்டதை அடுத்து, பழைய மாணவர் சங்கத்தினர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அவசர இலக்கமான 1929 என்ற இலக்கத்துக்கு முறையிட்டுள்ளனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் தமக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸார் கூறினர்.

Related Posts