Ad Widget

மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு விசேட பொலிஸ் குழு : யாழ். டி.ஐ.ஜி

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் தர்ஷாந்தன் தாக்கப்பட்டமை தொடர்பாக விசாரிப்பதற்கு யாழ்.பிரதம பொலிஸ் பரிசோதகர் குணசேகரா தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) கே.ஈ.எல். பெரேரா தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற வாரராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இந்த மாணவனைத் தாக்கியவர்கள் இனம் தெரியாத நபர்கள் எனக் கூறப்படுகின்றது. இதனால் இந்த மாணவனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளோம். இந்த சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் நின்றவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரையில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் இனம்காணப்படாமையினால் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. இளவாலைப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போலி சிகரட் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். யாழ். குடாநாட்டில் இந்த சென்ற வாரத்தில் நுளம்பு பெருகும் விதமாக சுற்றுச் சூழலை வைத்திருந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட 5 சம்பவர்கள் சேன்ற வாரத்தில் முறைப்பாடுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பொலிஸாரின் இரவு ரோந்து நடவடிக்கையின் போது நீதிமன்றப் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 18 பேரும் மதுபோதையில் 11 பேரும் சந்தேகத்தின் பேரில் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர். யாழ். கந்தரோடையில் ஆயுதமுனையில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதற்கு பெற்றோர்களின் கவனையீனமே காரணமாக இருக்கின்றன. பிள்ளை தெலைபேசியில் இளைஞர்களுடன் கதைத்து விட்டு றூம் போட்டு எல்லம் முடிந்த பின்னர்தான், பிள்ளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தாய்மார்கள் முறைப்பாடு செய்ய வருகிறார்கள். இது போன்ற நிறைய சம்பவங்கள் யாழ். பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிள்ளைகளைப் மட்டில் பெற்றோர் அக்கறையற்று இருப்பதையே இச்சம்பவங்கள் காண்டுகின்றன’ என்றார்.

இதேவேளை, யாழில் பாரிய குற்றச் செயல்களில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஈடுபடுகிறார்களா? அல்லது அவர்களுக்கு குற்றச் செயல்களில் தொடர்புகள் ஏதும் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது,

‘முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பாக எந்தப் பதிவுகளும் இல்லை. அவர்கள் நல்ல முறையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளார்கள்’ என பிரதிப் பொலிஸ்மா அதிபர்
தெரிவித்துள்ளார்.

Related Posts