Ad Widget

மாணவனின் கையில் கற்பூரம் கொழுத்திய ஆசிரியை

பாடசாலை மாணவன் ஒருவரின் கையில் ஆசிரியர் ஒருவர் கற்பூரம் கொழுத்திய சம்பவம் ஒன்று ஹட்டனில் பதிவாகியுள்ளது.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ ரொப்கில் தமிழ் வித்தியாத்தில் தரம் 03ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரின் வலது கையில் வகுப்பு ஆசிரியர் கடந்த வெள்ளிக்கிழமை கற்பூரத்தை கொழுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பறையில் மாணவி ஒருவரின் 20 ரூபா பணம் காணாமல் போனதை தொடர்ந்து குறித்த ஆசிரியை ஆறு மாணவர்களை அழைத்து பணத்தினை எடுத்தவர்கள் திருப்பி கொடுக்குமாறு கூறியுள்ளார்.

அத்துடன் மாணவர்களை அச்சுறுத்துவதற்காக கற்பூரத்தை கொழுத்திய போது பரமேஸ்வரன் பவித்திரன் என்ற மாணவனின் உள்ளம் கைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக ஆசிரியையை அழைத்து விசாரணை செய்வதற்காக ஹட்டன் கல்வி வலயத்தில் இருந்து குழு ஒன்று ரோப்கில் தமிழ் வித்தியாலயத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக ஹட்டன் வலய கல்வி பணிமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பாடசாலையின் ஆசிரியை இடம் மாற்றம் செய்யுமாறு கோரி ரொப்கில் தோட்ட மக்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் ஆர்ப்பாட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் ஹட்டன் வலயகல்வி பணிமனை ஆகியன விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

Related Posts