Ad Widget

மாடு கடத்தலைத் தடுக்கும் நடவடிக்யை மேற்கொண்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு திடீர் இடமாற்றம்!!

தீவுப் பகுதியிலிருந்து இறைச்சிக்காக மாடுகளைக் கடத்தும் கும்பல்களை இலக்கு வைத்து நடவடிக்கை எடுத்து வந்த ஊர்காவற்றுறை தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றக் கட்டளை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் அலுவலகருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தீவகத்தில் அவருடைய தனிப்பட்ட நடத்தை பற்றி கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடுத்தே இடமாற்றம் வழங்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

தீவகத்திலிருந்து கட்டாக்காலி கால்நடைகளை இறைச்சிக்காக கடத்திச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்தன. அவற்றை தடுக்கும் நடவடிக்கையில் தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் தீவிர ஈடுபாட்டை காட்டியிருந்தார்.

மாடுகளைக் கடத்திச் சென்ற கும்பல்களில் பலரை அவர் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தார்.

பொலிஸ் அலுவலகரை இடமாற்ற கடந்த மாதம் முற்பகுதியிலும் முயற்சிகள் மேற்கொண்ட போதும், உயர் மட்டத்தலையீட்டால் தடுக்கப்பட்டது. எனினும் அந்த தலையீடு விலகப்பட்ட நிலையில் இந்த இடமாற்றம் நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபாடு கொண்ட பொலிஸ் அதிகாரிகள் உள்பட எட்டுக்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அண்மைக் காலத்தில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts