புதிதாக பிரகடனப்படுத்தப்பட்டு தேசிய அரசாங்கத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மாத்தறை, தெலிஜ்ஜவில சமரசிங்ஹாராம அறநெறிப் பாடசாலையின் நேற்று மாலை, மாணவத் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நான் தற்போது ஓய்வில் இருக்கிறேன். அரசியல் தீர்மானங்களை நான் தற்போது எடுக்கப்போவதில்லை. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த தேசிய அரசாங்கம் பற்றி பேசும் போது சிலர் சிரித்தனர். கேலி செய்தனர். ஆனால், இன்று உருவாகியுள்ள தேசிய அரசாங்கத்தை நான் அவ்வாறு இழிவுபடுத்தப் போவதில்லை. வாழ்த்துக்களையே தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
தேசிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற விவகார அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.