Ad Widget

மஹிந்த ராஜபக்சவை தூக்கிலிடுங்கள் ; பூநகரியில் மக்கள் வலியுறுத்து

தமிழ் மக்களை அநியாயமாக படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணி இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலகத்தில் யாழ். மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் கண்காணிப்பில் இடம்பெற்றுவருகின்றது.

இதில் கலந்துகொண்டு சாட்சியமளித்தபோதே மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் பொது மக்கள் அநியாயமாக கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தகுதி, தராதரம் பாராது உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மக்களது கொல்லப்பட்டமைக்கு நியாயம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் தமிழ் மக்களுக்காக போராடி உயிரிழந்த மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வை எந்தவொரு இடையூறுமின்றி அனுஸ்டிப்பதற்கு வழியேற்படுத்தி தர வேண்டும் எனவும், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்வதற்கு இராணுவத்தின் தலையீடு இருக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை செயலணி நடைபெறும் குறித்த பகுதியில் இன்று காலை இராணுவத்தினரின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் எனினும் மனித உரிமை ஆணைக்குழுவினரின் வருகையை அடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

போர்குற்ற விசாரணை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான மனோரி முத்தெட்டுகம தலைமையிலான விசேட செயலணி மக்களின் கருத்துக்களை அறியும் அமர்வை நடத்துகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சிரேஷ்ட சட்டத்தரணி மனோரி முத்தெட்டுகம தலைமையில் 11 பேரைக் கொண்ட குறித்த செயலணி பொதுமக்களிடம் கருத்துக்களை அறிந்து வருகின்றது.

இதற்கமைய கடந்த வாரம் முதல் இந்த கருத்தறியும் செயற்றிட்டம் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts