Ad Widget

மழையுடனான காலநிலையும் காற்றின் வேகமும் இன்று அதிகரிக்கும்!!

நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலையும் காற்றின் வேகமும் இன்று குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வானம் மேகமூட்டமாக காணப்படக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மி.மீ அளவான மழை பதிவாகக்கூடும். குருநாகல், காலி, மாத்தறை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுகின்றது.ஏனைய பிரதேசங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

குறிப்பாக வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35 – 45 கிலோ மீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் .

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

இவ்விடயத்தில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts