Ad Widget

மருத்துவ பரிசோதனையில் ஆர்வம் காட்டாத முன்னாள் போராளிகள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கான விச ஊசி மருத்துவ பரிசோதனையில் இதுவரை 193 முன்னாள் போராளிகள் மாத்திரமே பங்கேற்றுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வடமாகாண வைத்தியசாலைகளில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகின்றது.

இதன்படி பத்தாவது வாரமாக மருத்துவ பரிசோதனை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதுவரை மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளில் யாழ் மாவட்டத்தில் 30 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 28 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 123 பேரும், வவுனியா மாவட்டத்தில் 07 பேரும், மன்னார் மாவட்டத்தில் 05 பேருமாக 193 பேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் மருத்துவ பரிசோதனை இடம்பெற்று வருகின்ற போதும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்பதில் முன்னாள் போராளிகள் ஆர்வம் காட்டவில்லையென குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளியான 46 வயதுடைய எஸ்.அமலதாஸ் கடந்த மூன்றாம் திகதி திடீரென மயக்கமுற்று விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts