“வலி. தெற்கு பிரதேச சபையே வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே” என பதாதைகளை தாங்கியவாறு மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குற்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் தமது வியாபார நடவடிக்கையில் ஈடுபடாது சந்தைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மருதனார்மடம் பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சந்தைக் கட்டடத் தொகுதியில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு தொடர்பிலேயே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பிரதேச சபையினால் வழங்கப்பட இருக்கும் இடத்தின் அளவீடு தமது வியாபார நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு போதுமானதாக இல்லை என வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “மக்கள் பிரதிநிதிகளான உங்களுக்கு எங்களை மக்களாக தெரியவில்லையா?”
“எமக்கு உரிய இடத்தினை பழையதுபோல் நிறைவாகத் தாருங்கள்”
“உங்களுடைய முதலாலித்துவ அதிகாரத்தை ஏழைப் பாட்டாளிகள் மீது திணிக்காதே.”
“வேண்டும் வேண்டும் நியாயம் வேண்டும்” என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அத்தோடு தமக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டுமென கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஒளிப்படங்கள் அடங்கிய பதாதைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கையில் ஏந்தியிருந்தனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த 22ஆம் திகதி பிரதேச சபைக்கு முன்பாகவும் வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.