Ad Widget

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் தொற்றாளர்கள்!

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (புதன்கிழமை) 130 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தபட்டவர்கள் என மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 436 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒன்பது பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதுடன் நேற்று (30-12-2020) மட்டும் யாழில் 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி, மருதனார்மடம் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட 20ஆவது நாளான நேற்றையதினம் வரையில் மொத்தமாக 130 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Posts