Ad Widget

மருதனார்மடம் கொத்தணியால் பாதித்தோர் எண்ணிக்கை 109ஆக உயர்வு!!

மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் ஒரு வியாபாரிக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (டிசெ. 27) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 17ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 109ஆக உயர்வடைந்துள்ளது.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மருதனார்மடம் சந்தையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வியாபாரி ஒருவருடன் நேரடித் தொடர்புடைய வியாபாரிக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்துக்கு அருகாமையில் வசிக்கும் அவர் 14 நாள்களாக சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 393 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட தென் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கோப்பாய் கோவிட் -19 சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts