வடமாகாண விவசாய அமைச்சின் குறித்து ஒதுக்கப்பட்ட நன்கொடை நிதியில் இருந்து 3.3 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உள்ளீடுகளை மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வழங்கி வைத்துள்ளார். இப்பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (09.10.2015) உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
வடமாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியாக நடப்பு 2015ஆம் ஆண்டுக்கு 73 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியில் மன்னார் மாவட்டத்தின் விவசாய அபிவிருத்திக்கென 17 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு கட்டமாகவே இப்போது 155 விவசாயிகளுக்கு 3.3 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உள்ளீடுகள் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
உயர் விளைச்சலைத் தரக்கூடிய டீபு 360 வர்க்க விதைநெல், உவர் நிலங்களில் தாக்குப்பிடிக்க கூடிய யுவ 362 வர்க்க விதைநெல், சேதன விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய இன விதைநெல் ஆகியவற்றோடு காளான் வளர்ப்புக்குத் தேவையான உபகரணங்கள், பழமரக்கன்றுகள் மற்றும் போகமற்ற காலங்களில் மரக்கறிச் செய்கையை மேற்கொள்வதற்கான நல்லின விதைப் பொதிகளுமே இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
பிரதி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் தலைமையில் நடைபெற்ற விவசாய உள்ளீடுகளை வழங்கும் நிகழ்ச்சியில் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்கள் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், பிறிமூஸ் சிராய்வா, மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசீகரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.