Ad Widget

மன்னார் மீனவரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி இராமநாதபுரம் ஆட்சியரிடம் வேண்டுகோள் !

கடலில் புயலில் சிக்கி உயிர் பிழைத்த மன்னார் மீனவரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி இராமநாதபுரம் ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

3 மாதங்கள் தொடர்ந்து முகாமில் வசித்து வந்த அவரை மீண்டும் தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

மன்னார் – பேசாலை முருகன் கோவில் பகுதியை அந்தோணி மரியதாஸ் என்ற மீனவர் கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற போது நடுக்கடலில் ஏற்பட்ட புயல் மற்றும் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த படகில் இருந்த அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் மற்றும் அன்றன் ஆகிய இருவரும் கடலில் மூழ்கியுள்ளனர். இதில் அன்றன் என்பவர் மூச்சுத்திணறி கடலில் மூழ்கியுள்ளார்.

அந்தோணி மரியதாஸ் என்பவரை இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரத்தில் கரைசேர்த்தனர். அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு தாக்கல் செய்த இராமேஸ்வரம் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி அவர் மீனவர் என்பதால் அவரை ஜாமீனில் விடுதலை செய்து தூத்துக்குடி முகாமில் வசிக்கும் அவரது சகோதரி வீட்டில் தங்கியிருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் தன்னை நொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறு மரியதாஸ் இராமநாதபுர மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார்.

அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவரை இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts