மன்னார், முள்ளிக்குளம் கிராம மக்களின் பூர்வீக காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று நேற்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தலைமையில் சென்ற ஆயர் இல்ல பிரதிநிதிகளுக்கும் வடமாகாண ஆளுனர் ரெஜீனோல்ட் குரேவிற்கும் இடையில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடுவதாக இதன் போது வடமாகாண ஆளுநர் ரெஜீனோல்ட் குரே மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது
இந்த நிலையிலே குறித்த கிராமத்தை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தலைமையில்,
முள்ளிக்குளம் பங்குத்தந்தை அன்ரன் தவராஜ், முள்ளிக்குளம் கிராம பிரதிநிதிகள் இணைந்து வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.