Ad Widget

மன்னார் ஆயரின் உடல் நிலை தேறிவருவதாக தெரிவிப்பு

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் உடல் நிலை தேறிவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீர் சுகவீனமுற்ற நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, நேற்று சனிக்கிழமை (02) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல்களை ஆயரின் செயலாளர் அருட்தந்தை முரளி அடிகளார் உறுதிப்படுத்தினார்.

மன்னார் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை கொழும்பு கம்பன் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு கொழும்பு பயணமாகியிருந்தார்.

இந்நிலையில் இலங்கை வந்திருக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெரியை சனிக்கிழமை (02) சந்திப்பதற்கான ஆயத்தத்தில் ஈடுபட்டிருந்த போதே அவர் திடீர் உடல் நலக்குறைவுக்கு ஆளாகியிருக்கின்றார்.

ஆயருக்கு உள்ளக நரம்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் உபாதைக்கு தேவையான சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மன்னாரிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் ஆயரின் நலனை வேண்டி விசேட பிரார்த்தனைகள் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றன.

Related Posts