Ad Widget

மனித உரிமை பாதுகாப்பாளர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றனர்

மனித உரிமை பாதுகாப்பாளர்களது சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுவதோடு அச்சுறுத்தல்களுக்கும் உட்படுவதாக மனித உரிமை பாதுகாப்பாளர்கள், மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினர்.

மனித உரிமை பாதுகாப்பாளர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டியை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை (13) மனித உரிமை ஆணைக்குழு யாழ். காரியாலயத்தில் இடம்பெற்றது.

மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் மற்றும் கல்வி செயற்றிட்ட அதிகாரி கே.கபிலன் ஆகியோர் இணைந்து இந்த கலந்துரையாடலை நடத்தினர்

இதில் கலந்துகொண்ட மனித உரிமை பாதுகாப்பாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டினர்.

வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படட இடங்களுக்கு சென்று வருகையில் அங்கு ஏன் சென்றாய் எதுக்கு சென்றாய் என்று புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்துகின்றனர்.

உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள இராணுவத்தின் விடுதியில் சில பிரச்சினைகள் இடம்பெறுவதாக எமக்கு தகவல் கிடைத்த போதும், அங்கு சென்று அப்பிரச்சினைகளை கண்டறிவதற்கு முடியாதுள்ளது.

சில அதிகாரிகள் அங்கு வரச்சொல்கிறார்கள். சில அதிகாரிகள் அங்கு செல்லக்கூடாது என்று அச்சுறுத்துகின்றனர்.

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பில் நான்கு வரியில் கவிதை எழுதியமைக்கு புலனாய்வாளர்கள் 15 தடவை விசாரணை நடத்தினர்.

வலிகாமம் வடக்கு ஜே – 125 கிராம அலுவலர் பிரிவுக்குள் ஒரு அரசியல்வாதி தன்னை தவிர வேறு யாரும் அப்பகுதிக்குள் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.

அப்பகுதியில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல இடங்களில் தமது சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டும் தாம் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதாகவும் மனித உரிமை பாதுகாப்பாளர்கள் கூறினர்.

மனித உரிமை பாதுகாப்பாளர்களது செயற்பாட்டை அரச அதிகாரிகள் அங்கிகரிக்க வேண்டும். பெண் மனித உரிமை பாதுகாப்பாளர்களுக்கான பால்நிலை பார்வை நோக்கொன்றை ஒருங்கிணைப்பதற்கு அரச அதிகார அமைப்புக்கள் அக்கறை கொள்ள வேண்டும்.

மனித உரிமை பாதுகாப்பாளர்கள் தொடர்பான செய்திகளை பிரசுரிக்கையில் ஊடக ஒழுக்க முறைகளை கவனத்தில் கொள்ளல் போன்றவை உள்ளடங்கலாக 18 விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Related Posts