Ad Widget

மனச்சாட்சிக்கு விரோதமான அரசியலை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகின்றேன்

தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் எஸ். சிவகரன்:-

மனச்சாட்சிக்கு விரோதமான அரசியலை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகின்றேன் என இளைஞர் அணி செயலாளர் எஸ். சிவகரன் தெரிவித்தார்.

Sivakaran_S

தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி மாநாடு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தனது பேருரையில் கருத்து தெரிவித்ததாவது,

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈழத்தமிழ் தேசிய இனமானது முற்றிலும் வேறுபட்டதும் அநிதியானதுமான இனஅழிப்பு நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. ஆயுத ரீதியிலான யுத்தத்தைவிடவும் ஆபத்தானதும் முற்றிலும் தமிழ் தேசிய இனத்தை தொலைநோக்கு திட்டங்களுடன் நிர்மூலமாக்கும் வன்மத்துடனும் அமைதி, சமாதானம், ஜனநாயகம், அபிவிருத்தி என்ற சொற்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் எம் கண்ணெதிரே காணக்கூடிய துரதிஸ்ட நிலையில் உள்ளோம்.

தமிழினத்தை பாதுகாக்கும் பொறுப்புடையவர்கள் என்று உலகிற்கு ஓங்கி பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கும் நாம் அன்றாடம் அவமான கரமான அறிக்கைப் போர் நடத்தி நம்மை நாமே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நமது பலவீனங்களை பகிரங்கபடுத்திக் கொண்டிருக்கும் இழிநிலையில் ஆட்சிப் பீடத்தை தாதா செய்யதும் அயலகத்து ஆட்சியாளரின் ஆணைக்கு அடங்கியும் சொந்த மக்களின் அபிலாசைகளை வெறும் நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளாலும், சலுகைகள் ,நிவாரணங்களை வழங்கியும் புறந்தள்ளி உலகம் சுற்றுபவர்களாளவும், ஊருக்குள் அவ்வவ்போது விழாக்களில் மாலை மரியாதைகளுடன் உலாவந்து தரிசனம் கொடுத்து கைதட்டல் வாங்குபவர்களாகவும் மாறியிருக்கின்றோம்.

மனசாட்சிக்கு விரோதமான அரசியலை நினைத்து வெட்கமும் வேதனையும் கொண்ட மனநிலையுடன் உங்கள் முன் உரையாற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளமை சகித்துக் கொண்டு உங்கள் முன் நிற்பது ஒரு காலத்தேவையின் நிமித்தமே ஆகும்.

எமது இனம் யுத்தமா? சமாதானமா? என்ற மேலாதிக்க கேள்விக்கு அவர்கள் விழியிலேயே பதிலளித்துக் காட்டி நிமிர்ந்த இனம் எமது இனம்.

‘சமாதானத்திற்கான யுத்தம்’ என்று போரினவாத போர்பிரகடனத்திற்கு கம்பீரமாகபதிலளித்து தன்மானம் காத்து நின்ற இனம் கடைசியில் மனிதாபிமானத்திற்கான போர் என்று இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஒரு சிறுபான்மை இனத்தின் மீது பேரினவாத பௌத்த சிங்கள அரசும் அதன் ஆதரவு உள்ளுர் மற்றும் வெளியூர் சக்திகள் அனைத்தும் இணைந்து அயலக தேசத்து மேலாதிக்க அணுசரனையுடன் மேற்கொண்ட மிகவும் கொடூரமானதும் இன்று சர்வதேச மட்டத்தில் மாபெரும் மனித உரிமை மீறல் குற்றம் என வர்ணிக்கப்பட்டு விசாரனை நிறுத்தப்பட்டுள்ளதுமான ஒரு கொடிய தமிழ் இன அழிப்பையே முழுமையான இலக்காக கொண்ட பேரவலப் போரை எதிர் கொண்டு பேரழிவுத் துயரைச் சுமந்து மிஞ்சி நிற்கும் இனமாக எமது இனம் உள்ளது.

இந்தநிலையில் எம் இனத்தின் மீட்பர்களாக எம்மை அடையாளப்படுத்தி சர்வதேச மட்டத்தில் பேசிவரும் நாம் எம்மினவுரிமை மீட்பு நடைவடிக்காக என்ன செய்துள்ளோம்? என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்விக்கு எம்மிடம் உறுதியாக நிமிர்ந்து நேர்மைத் திறனுடன் கூடிய தெளிவான பதில் ஏதும் உள்ளதா இந்த கேள்விக்கு விடைகாணுவதே இவ்வுரையின் தொணிப் பொருளாக அமைந்துள்ளது

இந்த கேள்விகளுக்கானவிடை தேடலுக்கு ஏற்படும் காலதாமதம் அல்லது அதற்கு காட்டும் அக்கறையினம் அல்லது அதனை அலட்சியப்படுத்தும் நமது இயல்பு அனைத்துமே எமது இனத்தை அழிக்க நினைப்போரின் செயற்பாடுகள் அனைத்துக்கும் துணைபோகும் நடவடிக்கைகளாக வரலாற்றில் அர்த்தப்படுத்தப்படும் என்று எச்சரிக்கையுடனேயே மேலே தொடர்கின்றேன்

வரலாறு கற்றுத் தந்த பாடம்

சுதந்திரம் பெற்றதாக கூறப்படும் நாளிற்கு முன்னரும் பின்னருமான காலகட்டங்களில் தமிழர் தம் அரசியல் தலைமைகள் பல்வேறு கட்டங்களிலும் தம் தொலைநோக்கு சிந்தனைத்திறன் அற்ற அரசியல் செயற்பாடுகள், சுயநலநோக்கிலான அரசியல் கோட்பாடுகள் பதவிகள், மற்றும் சலுகைகளினைப் பெற்றுக் கொள்ளும் இலக்கினைக் கொண்டதன்,உறுதியான இலட்சியம் மற்றும் இலட்சியத்தை ஆத்மார்த்தமாக வரித்துக் கொள்ளாத கொள்கைகளால் எத்தகைய அவலங்களை,அழிவுகளை,அவமானங்களை, சந்தித்தது என்பதை வரலாறு ஆழமாக பதித்தே வைத்துள்ளது

அத்தகைய வரலாற்றுத் தவறுகளின் விளைவுகளில் இருந்து எத்தகைய பாடங்களையும் நமது தலைமைகள் அதாவது அரசியல் தலமைகள் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை

ஒவ்வொருகாலகட்டத்திலும் நம்தலைமைகள் விட்ட அரசியல் தவறுகளின் விளைவுகளை முழுமையாக –நேரடியாக அனுபவித்தவர்கள் தமது மக்கள் தான்

இலங்கையரசுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அதன் போதான ஒப்பந்தங்கள். எல்லாவற்றிலும் அரசியல் உரிமைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை சலுகை அரசியலுக்கு தம் கொள்கைகளை விட்டுக்கொடுத்த துரோகத்தனமே மேலோங்கயிருந்தது.

இந்திய இலங்கை உடன் பாட்டின் போது எமது இனத்தின் தனித்துவ இறைமை,உரிமைகளை தகைபிராந்திய அரசியல் நலனுக்காக அபகரிப்பு முனைப்பாக செயற்பட்ட பிராந்திய வல்லரசின் மேலாதிக்கத்திற்கு விசுவாசமாக செயற்பட்டமையானது இன்று வரை தொடர்கிறதே!

இன்னும் 13ம் திருச்சட்டம் அதன் பிரதான அம்சங்கள் யாவும் பகிரங்கமாகவே நிராகரிக்கப்பட்டும்,சட்டரீதியாக நீக்கப்பட்டும் முள்ள நிலையில் மீண்டும் அதனை நிறைவேற்ற இலங்கை அரசை இந்தியா கோரும் நாடகத்தை தரும் படி மக்களை சிந்திக்கத் துண்டுவதில் என்ன நன்மையை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும்?

2002 இல் ஏற்பட்ட சர்வதேச அனுசரணையுடனான பேச்சுவார்த்தையானது காலாவதியான,அல்லது காலாவதியாக்கப்பட்ட 13ம் தருத்தச் சட்டத்திலான ஒரு புறம் ஒதுக்கிவிட்டு வேறுவழியில் தாய்லாந்து,நேர்வே, ஜெனீவா, ஜப்பான, ஜெர்மன் என்று பயணித்து ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டு முடிவடைந்த நிலையில் மீண்டும் இந்திய மாயைக்குள் 13ம் திருத்தச்சட்டபெறிக்குள், நுழைய இந்தியா தூண்டுவதை வைத்து இலங்கை அரசுடன் பேசத்தயார் என மக்களின் அபிப்பிராயத்தை, அறியாது அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயமாகும்.

சரி,பேச்சுவார்த்தைக்குதயார்,எங்கே,எப்படி,எந்தவகையில்,எவர்அனுசரனையடன் எந்ததளத்தில்இருந்துபேசுவது?

மீண்டும் ‘அ’தரத்தில் இருந்து தொடங்குவதா? அல்லது, கடைசியாக இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தை விட்ட இடத்தில் இருந்து தெடங்குவதா?

இரண்டாவதானால் சரி.ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளலாம் மீண்டும் 13 வது திருத்தச்சட்டத்திற்கு இந்தியா வலியுறுத்துவதாக தெரிகிறது வடக்கு கிழக்கு இணைப்பு என்ற விடயத்தை இலங்கை அரசு சட்டரீதியாக நீக்கி புறக்கணித்து விட்ட நிலையில், வடக்குக்காணி,பொஸிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமுடியாது இலங்கைஅரசு வெளிப்டையாக அறிவித்து விட்ட நிலையில் மீண்டும் 13ஜ வலியுருத்துவது தமிழ் மக்களை ஏமாளியாக்கும் செயற்பாடாக தெரியவில்லையா?

இது இந்தமண்ணிக்காகவும்,மக்களின்வடுதலைக்காகவும் தம்மையே அர்ப்பணித்த மனித தெய்வங்களை அவமதிப்பதாகத் தெரியவில்லையா?

சலுகைகளுக்காகவும்,நிவாரண அன்பளிப்புகளுக்காகவும் அவர்கள் யாரிடமும் எங்களைக் கையேந்தச் செல்லி போராடவில்லை என்பதை நாம் எம் மனதில் கொள்ளவேண்டும்.

என் மதிப்பக்குரியோரே!

இன்று இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழரசு எமதுகட்சியும் இதில் பொறுப்புடன் தனது கடமையை உறுதியுடனும் மனோ தைரியத்துடனும், விரைந்தும் செய்ய வேண்டியுள்ளமையை நினைவிற் கொள்ளவேண்டும்.

உண்மையில் 14வது தேசிய மாநாடு தலைமைப் பேருரையில் ஐயா இரா. சம்பந்தன் குறிப்பிட்ட பின்வரும் விடயத்தை இங்கு இப்போது நினைவு படுத்தவேண்டிய அவசியம் எனக்குள்ளது. அதில்

தமக்கே உரித்தான அடிப்படை மனித உரிமைகளையும் தம்மைத் தாமே ஆளுவதற்கான நியாயமான அரசியல் அதிகாரங்களையும் கேட்டமைக்காக மட்டுமே படுகொலை செய்யப்பட்ட நூறாயிரம் வரையிலான எமது மக்களின் புதைகுழிகளின் மீது அஞ்சலித்து நாம் இங்கே ஒன்று கூடியிருக்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் மூலம் இங்கே ஒரு இனப்படுகொலை நடத்தமையை அவர் உறுதி செய்திருக்கிறார். அவரின் இந்தச் செய்தியை உரிய ஆதாரங்களுடன் உறுதி செய்யவேண்டியது அதாவது இனப்படுகொலையை சர்வதேச விசாரணை அரங்கில் மீண்டும் தெளிவாக முன்வைக்க வேண்டிய ஒரு காலக் கடமையை நாம் செய்தேயாக வேண்டும். இல்லையே இதைவிட துரோகிகளாகவே எம்மை எமது வரலாறு பதிவு செய்யும் என்பது சர்வ நிச்சயமாகும்.

அதே பேருரையில் அதே பக்கம் 4ம் பந்தியில் அவர் இன்னும் தெளிவாக சிறிலங்கா அரசாங்கம் எமது இனத்தின் மீது ஓர் இனப்படு கொலையை நிகழ்த்தியது என்பதையும் எமது இனத்திற்கான அரசியல் உரிமைகளைமறுத்து வருகின்றது. என்பதையும் அனைத்துலக ரீதியில் ஒரு பதிவாக ஆக்கி வெற்றி வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இனப்படுகொலை (Genocide) என்ற விடயம் இங்கு முக்கியத்துவம் கொண்டதாகின்றது.

இதனை இன்றைய சர்வதேச விசாரணையை முன்னெடுக்கும் மன்றில் முழுமையாக ஆதார பூர்வாக முன்வைப்பதன் மூலமே இங்கு நடைபெற்றது பயங்கரவாதிகளுக்கெதிரான நடவடிக்கையல்ல அரச பயங்கரவாத – இனப்படுகொலை நடவடிக்கைகளை எதிர்த்து தமது உரிமைகளுக்காக தம் மண்ணை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தவிர்க்க முடியாத நிலையில் மேற்கொண்ட இனத்தையே பூண்டோடு இழிக்கும் நோக்கிலான இனப்படுகொலை நடவடிக்கையே என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

எவருடைய அபிலாசைகளை பாதுகாக்கவும், எவருடைய அழுத்தத்திற்குட்பட்டும் நாம் இதனை சமரசமாக சமாளித்து மறைக்க நினைப்பதும் மிகவும் பாரதூரமான பின்விளைவுகளை நமக்கே ஏற்படுத்தும் என்பதையும் இங்கு கூறுதல் பொருத்தமானது.

இது நமது வரலாற்றுக் கடமை

இந்த சுயவிமர்சனம்,அல்லது சுயமதிப்பீடு என்பதை எவருக்கும் எதிரான கருத்தியல் தாக்குதலாக தயவு செய்து கருத வேண்டாம்

இப்படியான பரந்த-உரத்த சிந்தனையை நாம் கடந்த காலத்தில் வளர்த்துக்கொள்ளாமையால் நமது மக்களுக்கு நாமே ஏற்படுத்திய அவமானங்கள் மிக அதிகம்.

இதனைமேலும் தொடர்ந்து நமது சவக்குழியை நாமே தோண்டிக் கொள்ளும் விடயமே ஆகும்.

அடுத்தது

எமது கட்சியின் முழுமையானதும், தெளிவானதும்,காலத்தின் அத்தியாவசிய மாற்றங்களை உள்ளடக்கியதும்,அறிவியல் ரீதியிலான கருத்தியலை கொள்கை கோட்ப்பாடுகளை கொண்டதுமான உறுதியான தொலைநோக்கு சிந்தனையுடன் கூடியதுமான புதிய கொள்கைப் பிரகடனத்தையும்- அரசியல் யாப்பையும் மட்டும் மட்டுமல்லாது எதிர்காலத்தில் நிகழக்கூடிய எந்தப் பேச்சவாhத்தையின்போதும் நாம் தெளிவாக –உறுதியாக முன்வைக்கப்படக்கூடியதுமான எமது பிரச்சினைகளுக்கான தீர்வுப் பொதியை சகல தரப்பினரோடும் ஆலோசித்து உருவாக்கவேண்டும் இது இன்றைய காலகட்டத்தில் மிக அத்தியாவசியமானதாகும்.

இந்தத்தீர்வுப் பொதி உருவாக்கத்தில் தமிழ் தேசிய உணர்வுள்ள அனைத்து சிந்தனையாளர்களையும் உள்ளடக்குவது அவசியமாகும் இது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகும் இது எங்களுக்கானது, எங்களால் மட்டுமே உருவாக்கப் படவேண்டியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் இதில் அயல் தலையீடுகள் உள்ளக முரண்பாடுகளையும்- மோதல்களையும் பிளவுகளையுமே ஏற்படுத்தும் என்பது சர்வ நிச்சயம் இது எம்மை பிரித்தாளவிரும்பும் உள்ளக- அயலக சக்திகளுக்கு சாதகமாகும்.

விடயமே கட்சியின் கொள்கைகள், இலட்சியங்கள் தொடர்பான விடயங்களில் கட்சிக்குள் வந்தேறுகுடிகளாக நுழைந்து மேலோர் வட்டத்துள் ஊடுருவி மேலாதிக்கம் செய்ய வருவோரின் செயற்பாடுகளை அவதானிப்பது அவசியம் அந்நிய அயலக கருத்தியலாளரின் ஊடுருவல் ஆபத்தானது என்பதையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்

முள்ளிவாய்க்கால் பேரவலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு விட்டதாகவும் இப்போது அபிவிருத்தி-அமைதி,சமாதானம் நிகழ் வதாகவும் இனப்பிரச்சினை என இங்கு இப்போது எதுவுமில்லை எனவும் அரசும் அரசுசார்பு சக்திகளும் உலகெங்கும் பிரசாரம் செய்து வருகிறது இதற்கென பலமில்லியன் கோடி ரூபா செலவில் அரசு பிரசாரமும் செய்து வருகிறது

ஆனால் உண்மைஎன்ன? முள்ளிவாய்க்காளில் முடிந்ததாக கருதப்படுவது ஆயுதரீதியிலான நேரடி போர் மட்டுமே ஆகும் ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பு நடவடிக்கையானது இன்று பல்வேறு முறைகளில் மிகவும் நுனுக்கமான தொலைநோக்குத் திட்டத்துடன்-உளவியல், பொருளாதாரம், கல்வி,கலை,கலாசாரம், நில அபகரிப்பு- நிலஆக்கிரமிப்பு,என பல வடிவங்களில் முன்னெப்போவதையும் விட மிக மூர்க்கத்தனமான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பiதி போருண்மையாகும்.

ஆயுதப் போராட்டத்தை விடவும் இதுவே மிகவும் மோசமானதும் இன அழிப்பு நடவடிக்கை அதிகம் கொடூரமானதுமாகும்.

இதனை எதிர் கொள்ளல் என்பதும் அதிலிருந்து நாம் நம்மை பாதுகாத்தல் என்பதும் மேடையில் பேசி,பத்திரிகைளில் அறிக்கை விட்டு ,விழாக்களில் தோன்றி, மாலைகளுக்குதலை நீட்டி, தேசசஞ்சாரம் செய்து அடுத்ததேர்தலுக்கு நம்மை தயாராக்கி கொள்ளும் விடயம் அல்ல.

உச்சி முதல் உள்ளங்கால் வரை என்பது கட்சியின் நிர்வாகமற்றும் செயற்பாட்டு கட்டமைப்பு முதல் அடிப்படை உறுப்பினர்வரை எல்லாவகையிலும் கட்டமைப்பில் முழுமையான அறிவியல்-அரசியல் சிந்தனைவீச்சுத்திறன் கொண்டோரை உள்ளடக்கியதும் தேசிய உணர்வாளர்களைக் கொண்டதுமான புதிய,துறைசார் கட்டமைப்புக்கள் எல்லா மட்டத்திலும் எல்லா பிரதேசத்திலும் உருவாக்கப்படவேண்டும்.

தலைமைத்துவ வட்டத்துள் மாற்றங்கள் ஏற்படாமல் அதிகாரங்கள் ஒரு மையவட்டத்துள் குவிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கும் வலுக்கொண்டோராக ஒரு சிலரே இயங்கும் நிறைவேற்றுஅதிகார நிர்வாக முறைமை முற்றாக மாற்றப்பட்டு அதிகார பரவலாக்கல் கட்சிக்குள்ளும் ஏற்படுத்தப்படவேண்டும் கட்சி மக்கள் மயப்படுத்தப்படவேண்டும்.

வாக்களிக்க மக்கள் வாக்குறுதி வழங்க அரசியல் தலைமைகள் என்ற போக்கு முடிவு கட்டினால் மட்டுமே எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராளிகளாக மக்கள் எதிர்காலத்தில் மக்கள் எம்மை நம்புவார்கள் இதனை நாம் மிகவும் ஆழமாக கருத்தில் கொள்ளவேண்டும்.

இங்கு நான் சொல்லும் விடயங்களில் தீவிரத்தன்மை ஆச்சரியப்படுத்தினாலும் கடந்த மூன்று தசாப்த கால தமிழர் அரசியலில் அதற்கு முன்னரான அரசியல் செயற்பாடுகளும் இன்று நாம் எதிர் கொள்ளுவதற்காக அரசின் நடவடிக்கைகளும் முற்றிலும் வேறுபாடுகளை கொண்டவை ஆனாலும் கூட நாமிப்போது எம்மினத்தை பூரனமாக ஆக்கிரமித்து,நம் மண்ணில் இருந்து அகற்றி எமது அரசியல் சமூக பொருளாதார வாழ்வியல் வளங்களை தமக்குரியதாக்கும் அல்லது எம்மையே தம்வசமாக்கும் பேரினவாத சிந்தனையாளரிடம் இருந்து எம்மினதனித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளும் செயற்பாடுகளை புத்திசாலித்தனத்துடன் காப்பாற்றும் நடவடிக்கைகளை சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்

  • இராணுவ ஆக்கிரமிப்பு நிலையை நீக்கவும் எம்பாரம் பரிய நிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்க்கவும்,தடுக்கவும் தேசியமற்றும் சர்வதேசியரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்
  • இப்போதும் இராணுவ ஆக்கிரமிப்பு நிலையில் உள்ள எமது மக்களின் பாரம்பரிய நிலப்பரப்பு பின்நிலைஎன்ன?
  • உள்ளூரில் இடம்பெயர்ந்த நிலையில் சொந்த மண்ணில் இன்னமும் மீளக்குடியோரமுடியாமல் தடுக்கப்பட்டு அவலமுறும் மக்கள்-குடும்பங்களின் எதிர் காலம் என்ன?
  • போரினால் ஊனமுற்ற மக்களின் வாழ்வியல் நிலை என்ன?
  • போரினால் குடும்பத்தோரை இழந்தோர் 20 ஆயிரம்மேல்

குடும்பத்தலைவரை இழந்தோர் 89 ஆயிரம்,மனைவியை இழந்தோர் 25 ஆயிரம் மேல்,பிள்ளைகளைஇழந்தோர், 1000 மேல், அசையும் அசையாச் சொத்துக்கயை இழந்தோர்,உளவியல் பாதிப்புகளுக்குள்ளானோர்,பெற்றோரை இழந்தோர்,இன்னமும் முகாம்களில் வாழ்வோர், காணமல் போனோர்,அரசியல் கைதிகள்,சரணடைந்தவர்கள்,பெற்றோரால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என இன்னோரன்ன பிறவற்றிக்கும் முழுமையான நிரந்தரமான தீர்வு காணப்படாதநிலை தொடர்ந்து கொண்டே இருக்கையில் போர் முடிந்துவிட்டதாக கூறுவதில் அர்த்தமே கிடையாது.

அன்றாடம் புதிய புதிய வடிவில் போர் எம்மீது திணிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது ஆகவே இவையனைத்தையும் எதிர் கொண்டு நாம் பேராடி ஏதோவோர் வகையில் எம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம்.

நீட்டப்பட்ட துப்பாக்கி முனைகள் இன்னமும் எம்முன்னே எம்மை அச்சுறுத்திநிக்க பேச்சுவார்த்தைகளுக்கு தயார்என அறிவிப்பது எவ்வளவு அபத்தமானது அவமானகரமானது இந்தியப்பிரதமருக்குத்தான் எம்மக்களின் உணர்வும் வலியும் தெரியாது என்றால் எங்கள் தலைவர்களும் அவரது வில்லுப்பாட்டுக்கு ஆமா போட்டு தலையசைப்பது படுகொலை செய்யப்பட்ட எமது மக்களின் புதை நிலத்தின் மீது நின்று கூறுவது ஈடாகுமா?

இனமானம் காக்கும் தன்மையிழந்து தன்மானம் காக்கும் எண்ணம் தொலைத்து நம் தலைவர்கள் அனுபவத்திறனை முதுமைக்கு பலியிட்டுவிட்டு செயற்படுகிறார்களே என்ற ஆதங்கத்தில் மக்கள் தவிக்கிறார்களே என்பதை நாம் தீர்க்கமாக உணர வேண்டும்.

இது எமது மக்களின் வரலாற்றுத் திருப்பத்திற்கான சர்வதேச ரீதியிலான முக்கிய காலகட்டம் இந்தக்கட்டத்திலும் நீங்களும் நாங்களும் கல்தோன்றி மண்தோன்றாகக் காலத்து பெருமைகளைப்பேசி கைதட்டல் வாங்கிக் காலம் கழிக்கப்போகிறோமோ?

அவமானம் மண்ணுள் மண்ணாக இன்னமும் தாங்கிக் கொண்டிருக்கும் தியாகிகளான எம் மக்களின் தியாகங்களிற்கு ஈடாகுமா?

எனவே நம் சுயநல அரசியல் மற்றும் குடும்பநல அரசியல் அபிலாஷைகளுக்கு அப்பால் நம் இனத்தின் எதிர்கால வாழிவியல் மற்றும் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் இலக்குடன் எமது கட்சியின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் திட்டமிடவேண்டும் என்ற முடிவுடன் நாம் இயங்க வேண்டும்.

இதேவேளை கடந்த மூன்று தசாப்த கால ஆயுதப்போராட்டத்தினை நாம் நம் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று நேர்மையுடன் அதன் காலத்தேவை பற்றிய கரிசனையுடன் மதிப்பிட வேண்டியதும் மிகவும் அவசியம் அந்த போராட்ட வடிவம் தமிழரசுக்கட்சிக்குள் இருந்த இளைஞர்களாலேயே தோற்றங் கொண்டது என்பதையும் அது அப்போது முனைப்புப் பெற்றிருக்காவிட்டால் 1981 மாவட்டசபை மசோதா என்ற புதை குழிக்குமா தமிழினம் சமாதிகட்டப்பட்டிருக்கும் என்ற மகத்தான உண்மையை எவரும் மறுக்கமாட்டார்கள் எப்படி இந்திய அமைதிப் படை என்ற பெயரிலான இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப்புலிகளின் அறவழி மற்றும் ஆயுதரீதியிலான போராட்டமானது இந்தியாவின்அசிங்கமான ஆக்கிரமிப்பு அரசியல் முகத்தை தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அம்பலப்படுத்தியதோ இந்திய ரானுவத்தின் மிகக் கொடூரமான மனிதவுரிமை மீறல் நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டியதே அதேபோன்று முள்ளிவாய்க்கால் வரையிலான யுத்தமானது இலங்கை அரசுடன் கை கோர்த்து அதற்கு இரானுவ ரீதியில் உதவி செய்த நாடுகள் தமது செயற்பாடுகளுக்காக வெட்கப்பட்டு இன்று அதே நாடுகள் இலங்கையின் மனித உரிமைமீறல் நடவடிக்கைகளை சர்வதேசமன்றில் பாகிரங்கமாக விசாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதன் மூலம் எமது போராட்டத்தின் சகலவடிவங்களின் பின்னால் உள்ள நியாயத்தன்மையை உணரவைத்தமை மறக்கக்கூடாது.

இன்று உலகின் மனச்சாட்சியை உரைவைக்குமளவிற்கு எமது மக்களை பாதுகாக்க அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க தம் இன்னுயிரை அர்ப்பணித்த மக்கள் எத்தனை மகத்தானவர்கள் என்பதை மனதில் நிலை நிறுத்தி எமது பணிகளை எமது சுய சிந்தனையின் தெளிவான வழிகாட்டலில் எந்த அன்நிய –அயலக கட்சிகளின் அரசியல் அபிலாசைகளுக்கும் அடிபணியாமல் நமது மக்களுக்கு விசுவாசமாக முன்னெடுப்போம் என உறுதி கொள்வோம்.

இதேபோன்று இப்போதுள்ள சூழ்நிலையில் மூத்த தலைவர்கள்,கட்சியை எதிர்கால சூழலுக்கு கேற்ப அறிவியல் பூர்வமாக சிந்தித்து முன்னெடுக்க கூடிய இளம் தலை முறையினரிடம் ஒப்படைத்து தாம் பின்னால் நின்று கட்சிக் கட்டமைப்புகளை உருவாக்கி நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பினை உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இதே போன்றதோர் முடிவை முன்னர் இந்திய காங்கிரஸின் அக்கிராசனராக விளங்கிய பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எடுக்க வேண்டுமென வலியுறுத்தி விலகியமையை இங்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

இது மாத்திரமின்றி எமது இளைஞர்களே நீங்கள் எமது இனம் அடைந்துள்ள பாதிப்புகளை எக்காலத்திலும் மறந்தவர்காளகி விடக்கூடாது. எமது அரசியல்வாதிகள் போல் கருப்பு காருக்கும் அமைச்சு பதவிகளுக்கும் போட்டி போடுபவர்களாகவும் மாலைகளுக்குகாக மக்களை சந்திப்பவர்களாகவும் உருவாகி விடாதீர்கள் என தெரிவித்தார்.

Related Posts