ஏவிளம்பி புத்தாண்டை கறுப்புக் கொடிகள் ஏற்றி கறுப்பு தினமான அனுஷ்டித்ததாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டனர்
மத்திய அரசாங்கத்திற்கும் வடமாகாண சபைக்கும் கறுப்பு புத்தாண்டு வாழ்த்துக்களையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களுடைய வாழ்வாதாரத்தை கவனத்திற்கொண்டு தமக்கான உடனடி வேலைவாய்ப்பை பெற்றுத்தருமாறும் வேலையற்ற பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால், கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம், நேற்று 47 ஆவது நாளை எட்டியுள்ளது.
வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில், பட்டப்படிப்பை நிறைவுசெய்த தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் காலவரையறையற்ற போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
எந்தவொரு பட்டதாரிகளையும் மீண்டும் மீண்டும் தெருவில் நிறுத்தும் வேலை வேண்டாம் என்றும் போலி வாக்குறுதிகளை வழங்க வேண்டாம் என்றும் வேலையில்லாத பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.