Ad Widget

மண்டைதீவில் தனியார் காணியில் இராணுவ முகாம் அமைக்க முயற்சி!!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமுக்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில், நிலஅளவைத் திணைக்களத்தினர் இன்று (28) காணிகளை அளவிடுவதற்கு வந்த போது, அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டனர். இதனை அடுத்து நில அளவையை நிறுத்திவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

மண்டதீவு தெற்கு கடற்கரை வீதியில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை கடற்படையின் முகாமை விஸ்தரிப்புச் செய்யும் நோக்கில் நில அளவை திணைக்களத்தினர் இன்று வந்திருந்தனர்.

வேலணை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மண்டதீவு கிராம சேவகர் பிரிவான ஜே/08 பகுதியில் அமைந்துள்ள, தெற்கு கடற்கரை – சுடலை வீதியில் உள்ள நான்கு பேருக்கு சொந்தமான 62 பரப்பு தனியார் காணியை கடற்படையினர் தமது முகாமை விஸ்தரிப்பிற்காக சுவிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்..

இதற்காக இன்று நிலஅளவைத் திணைக்களத்தினர் ஊடாக காணி அளவீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதற்கு அப்பகுதி மக்களும் அரசியல் பிரமுகர்களும் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.அத்துடன் தங்களின் ஆட்சேபனையைத் தெரிவித்து எழுத்து மூலமான கடிதத்தையும் வழங்கினர்.

இதனையடுத்து நில அளவைத் திணைக்களத்தினர் நிலங்களை அளப்பதை கைவிட்டுச் சென்றனர். குறித்த மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதியில் ஏராளமான பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கடற்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை புலனாய்வாளர்கள் தமது கையடக்க தொலைபேசிகள் ஊடாக வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்தனர்.

Related Posts