Ad Widget

மக்கள் ஆணையை மைத்திரி, ரணில் நிறைவேற்றவேண்டும்! தேவையான ஒத்துழைப்பை கூட்டமைப்பு வழங்கும்!!

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும், அவர்கள் தலைமையில் உருவாகும் தேசிய அரசும் நாட்டின் நல்லாட்சிக்காக மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றவேண்டும். அத்துடன், நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தாமதமின்றி உடன் தீர்வைக் காணவேண்டும். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிபூரண ஆதரவை – ஒத்துழைப்பை வழங்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

அதேவேளை, தேசிய அரசொன்றை அமைப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் அமையவுள்ள தேசிய அரசு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் தலைவர் சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனவரி 8ஆம் திகதி ஆட்சி மாற்றத்திற்காக நல்லாட்சிக்காக ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு மக்கள் ஆணை வழங்கினர். அதனைத் தொடர்ந்து அந்த மாற்றத்திற்கு ஒப்பான – நல்லாட்சியை மகிமைப்படுத்த கடந்த 17ஆம் திகதியும் பொதுத் தேர்தலில் மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்கேற்ப ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையவுள்ள தேசிய அரசையும் வரவேற்கின்றோம். இந்தத் தேசிய அரசு நாட்டிலுள்ள இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரவேண்டும்'” -என்றார்.

Related Posts