Ad Widget

மக்களின் கருத்தறியும் உரிமையை பாதுகாக்க ஊடகங்கள் மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் – டக்ளஸ்

நாடாளுமன்ற அமர்வில் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரை தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளரினால் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவ் ஊடக அறிக்கையில் …..

ஆட்சிமாற்றம் ஒன்றின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று வாக்களித்துள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நாம் ஆதரவளிப்போம். இதேவேளை நீடித்த ஆட்சியில்தான் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று நாம் கேட்டுக் கொண்டதை ஏற்று வாக்களித்த மக்களுக்கு எமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

dak-thevananthaaa

நேற்று முன் தினம் (20) புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையிலான அரசின் முதலாவது நாடாளுமன்ற அமர்வின்போது கலந்து கொண்டு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையிலிருந்து..

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதேவேளை எமது மக்களின் முன்னுரிமைக்குரிய கோரிக்கைகளை முன்வைத்தே கடந்த அரசாங்கங்களுடன் நாம் பணியாற்றி வந்துள்ளோம். முன்னர் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன. முழுமையடையாத கோரிக்கைகளையும், செய்து முடிக்கவேண்டிய கோரிக்கைகளையும் நீங்கள் நிறைவேற்றித் தருவீர்கள் என்று நாம் நம்புகின்றோம். எமது கோரிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால அவர்களிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை குறிப்பாக சில தமிழ் ஊடகங்கள் எதிர்காலத்திலாவது மாற்றுக்கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அதனூடாகவே தமிழ் மக்களிடையே கருத்தறியும் உரிமையை பாதுகாக்க முடியும் என்றும் கூறினார். இச் செய்தியுடன் புதிய ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி கையளித்துள்ள பதினைந்து அம்சக் கோரிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஈ.பி.டி.பியினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான வழியில் செல்வதற்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதில் ஆரம்பித்து, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கூடாக அதை மேலும் செழுமைப்படுத்தல்.

நீண்ட காலமாகவும் விசாரணைகள் இன்றியும், குற்றங்கள் நிரூபிக்கப்படாமலும், புனர்வாழ்வு வழங்கப்பட்டும் சிறைகளில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்தல்.

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்பதே எமது நிலைப்பாடாகும். பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான அனைத்து நிலமும் உரியவர்களிடம் மீள ஒப்படைத்தல்

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைத் தாய் நாட்டினதும் பிரஜைகளாக இருப்பதற்கு இரட்டைக் குடியுரிமையை இலகுபடுத்தல்.

வடக்கு நோக்கிப் பயணம் செய்யும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஓமந்தைச் சோதனைச் சாவடியை முற்றாக அகற்றல்.

வெளி நாட்டவர்களும், வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களும் வட மாகாணம் நோக்கிப் பயணிப்பதை தடுக்கும் அல்லது நெருக்கடியை ஏற்படுத்தும் கடவுச்சீட்டு பரிசோதனை முறைமையை இரத்துச் செய்தல்.

யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் நலிந்துபோன மக்களை தூக்கி நிமிர்த்த உதவியிருக்கும் சமுர்த்திக் கொடுப்பனவை மேலும் அதிகரித்தல். சமுர்த்திப் பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுதல்.

யுத்தத்திற்குப் பின்னர் சொந்த வாழ்விடம் திரும்பிய மக்களினதும், மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களினதும் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்த உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.

யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் வேலையற்று இருக்கும் எமது இளைஞர், யுவதிகளுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்தல். சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தொழில்வாய்ப்புக்களை மேலும் ஏற்படுத்துதல் சொந்தப் பொருளாதார வளர்ச்சியில் எமது மக்கள் வாழுதல்.

எமது கடல் வளத்தை அழித்தும், சுரண்டியும் எமது கடற்தொழிலாளர்களது வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பதோடு, எமது கடற்தொழிலை புனரமைப்புச் செய்து நவீனமயப்படுத்தி எமது கடற்தொழிலாளர்களது வாழ்வை மேம்படுத்தல்.

விவசாய, உள்ளூர் உற்பத்திகள் மற்றும் கைத்தொழில்கள் என்பவற்றை ஊக்குவித்து ஒவ்வொருவரும் சுய பொருளாதார வளர்ச்சியடைய நிதிவளம் மற்றும் உள்ளீடுகளை வழங்குதல்.

நிலத்தடி நீர் மோசமாகப் பாதிப்படைந்துவரும் யாழ் மாவட்டம் உட்பட குடிநீருக்குப் பாரிய நெருக்கடியைச் சந்தித்துவரும் வட மாகாணத்தின் மக்கள் அனைவரும் பொருத்தமான பொறிமுறை ஊடாக சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தல்.

முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட ஏனைய அமைப்புக்களின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் வகையில் திட்டங்கள் தேவை.

ஆட்சி உரிமை (விசேட ஏற்பாடு) சட்ட திருத்தத்தை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வட மாகாணத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்ற நிலைமை உள்ளது.

முன்னாள் பொருளாதார அமைச்சின் விசேட நிதிக்கூடாக வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்குவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களில் இன்னும் இருபத்தி ஐந்து வீதமான பொருட்கள் வழங்கப்படாமல் இருக்கின்றது. அப்பொருட்களை உரிய பயனாளிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Related Posts