Ad Widget

மகிந்தவுக்கு படையினருக்கும் சர்வதேச நீதிமன்றில் தண்டனை பெற்றுக் கொடுப்போம்! – சிவாஜிலிங்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்ய உள்ளதாக வட மாகாணசபை உறுப்பினரும், குருணாகல் மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட போரின் போது பாதுகாப்புப் படையினர் வடக்கில் பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி மக்களை படுகொலை செய்திருந்தனர்.

இந்த குற்றச் செயல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பொறுப்பு சொல்ல வேண்டும். இவர்களுக்கு எதிராக சர்வதேச போர்க் குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி வடக்கு அரசியல் கட்சிகளின் கையொப்பங்களுடன் கூடிய மகஜர் ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளேன்.

வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இந்த மகஜர் சமர்ப்பிக்கப்படும்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய போதிலும், பொதுமக்கள் கொலைகள் தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. இதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மீதான நம்பிக்கை குறைவடையக் கூடும்.

மஹிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என எம்.கே. சிவாஜிலிங்கம் பிரதான சிங்கள வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு நேர் காணல் வழங்கியுள்ளார்.

குருணாகல் மாவட்ட வேட்பாளர் சிவாஜிலிங்கத்தின் இந்த செவ்வியே குறித்த சிங்கள பத்திரிகையின் பிரதான தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நேர்காணல்கள் மஹிந்த ராஜபக்ச தரப்பின் வாக்கு எண்ணிக்கையை மேலும் மேலும் அதிகரிக்கக் கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Posts