Ad Widget

மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை தொடர்வேன்- காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் ரிஐடியிடம் தெரிவிப்பு

“எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை நான் தொடர்வேன். எமது உறவுகளை எம்மிடம் ஒப்படையுங்கள் போராட்டத்தை கைவிடுகின்றோம்” இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கச் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜாவை வாக்குமூலம் பெறுவதற்காக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகத்துக்கு வருகை தருமாறு அண்மையில் அழைப்புவிடப்பட்டது.

எனினும் அவர் அங்கு செல்லாததால் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கிளிநொச்சிக்கு வருகை தந்து தமது மாவட்ட அலுவலகத்துக்கு நேற்று அவரை அழைத்து வாக்குமூலம் பெற்றனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் இடம்பெற்ற இந்த விசாரணை தொடர்பில் லீலாதேவி ஆனந்தநடராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எனது வங்கிக் கணக்குகளின் விவரங்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் காண்ப்பித்தனர். எமக்கு எங்கிருந்து பணம் கிடைப்பதாகக் கேட்டனர். வெளிநாடுகளிலிருந்து பணம் கிடைக்கின்றனவா? எனவும் வினவினர்.

வீதிகளில் இருந்து போராட்டதை தொடர்வதற்கான காரணத்தையும் அவர்கள் கேட்டனர்.

எனது பிள்ளையை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை நான் தொடர்வேன். எமது உறவுகளை எங்களிடம் ஒப்படையுங்கள் போராட்டத்தை கைவிடுகின்றோம். அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம்”
என்று வாக்குமூலம் வழங்கினேன் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கச் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா கூறினார்.

Related Posts