Ad Widget

மகனுக்கு இராணுவ வேடமிட்டு தேடுதல் நடத்தப்பட்டது – தந்தை சாட்சியம்

missing-people-3எனது மகன் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் மகனுக்கு இராணுவ சீருடை அணிவித்து அவர் மூலமாக ஏனையவர்களை பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையொன்றை இராணுவத்தினர் யாழ். மாநகர சபைக்கு முன்பாக முன்னெடுத்தனர்’ என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த தந்தையொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, ‘எனது மகன் காணாமல் போகவில்லை. அவரை இராணுவத்தினர் கைது செய்தனர். எனவே அவரை காணாமற் போனவர் என்று கூறாதீர்கள்’ என்றும் ஆணைக்குழுவினருடன் மேற்படி தந்தை முரண்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் முன் தோன்றிய தந்தையொருவரிடம் ‘உங்களில் யார் காணாமல் போயுள்ளார்?’ என்று கேள்வி எழுப்பிய போது ‘அப்படி கூறாதீர்கள்’ என்று கடும் தொணியில் பதிலளித்துள்ளார்.

அத்துடன், ‘எனது மகனான அருணகிரிநாதர் சுதன் காணாமற்போகவில்லை. எனது மகன் 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி காலை 10 மணியளவில் நல்லூர் பகுதியிலுள்ள எமது வீட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுகொண்டிருந்த போது நல்லூர் அரசடி இராணுவச் சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்’ என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள ஆணைக்குழுவினர், ‘காணாமற்போனோர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவே பதிவுகள் இடம்பெறுகின்றன. மகன் காணாமல் போகவில்லை, இராணுவத்தினரால் தான் கைது செய்யப்பட்டார் என்று உங்களுக்கு தகவல் கூறியது யார்?’ என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்துள்ள தந்தை, ‘தகவல் தெரிவித்தவர்களை பற்றி கூறினால் அவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என்பதால் யார் என கூறமாட்டேன்’ என்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து, ‘எனது மகன் காணாமற்போன சில நாட்களின் பின்னர் கல்வியங்காட்டுப் பகுதியில் இரவு 1.30 மணியளவில் பச்சை நிறக் கண்ணாடி பொறுத்தப்பட்ட பிக்கப் வாகனமொன்றில் முகத்தை கறுப்பு துணியால் கட்டியவாறு வந்த இராணுவத்தினர் மக்களைத் தாக்கியதுடன், பாரிய சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்’ என்று கூறினார்.

அத்துடன் என்னையும் அடிக்க முற்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் (ஐ.சி.ஆர்.சி) நாங்கள் அறிவித்தோம். ஆனால் அவர்கள் ‘விடுமுறை என்பதால் நாங்கள் வரமாட்டோம். சம்பவம் பற்றி தகவலை எமக்கு தாருங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின்னர் யாழ். மாநகர சபைக்கு முன்பாக எனது மகனுக்கு இராணுவ சீருடை அணிவித்து எனது மகனைக் கொண்டு ஏனையவர்களை பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையொன்றை இராணுவத்தினர் முன்னெடுத்தனர்’ என்றும் அந்த தந்தை தெரிவித்தார்.

‘இந்திய அரசியல்வாதியொருவர் பூஸா சிறைச்சாலையில் இருப்போரைப் பார்க்கச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் எனது மகன் இருக்கின்றார். அந்த புகைப்படம் எனக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கிடைத்தது’ என்று சுதனின் தந்தை மேலும் சாட்சியமளித்தார்.

Related Posts