Ad Widget

போலி தாதிக்கு விளக்கமறியல்

மருத்துவ தாதியாக நடித்து பெண் ஒருவரின் 15 பவுண் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த பெண்ணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் நேற்று திங்கட்கிழமை (25) உத்தரவிட்டார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். திருநெல்வேலி பத்திரகாளி கோவில் பகுதியில் வசிக்கும் பெண்னொருவருக்கு திருமணமாகி 5 வருடங்கள் கடந்த நிலையிலும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இவர்களின் வீட்டிற்கு வந்த இளம்பெண் ஒருவர், தான் குழந்தை விருத்தி நிலையத்தில் மருத்துவத்தாதியாகக் பணியாற்றுவதாகவும், இது தொடர்பில் சிறப்புத் தேர்ச்சி மிக்க வைத்தியர் இருக்கின்றார். அவரிடம் உங்களுக்கு அனுமதி எடுத்துத் தருகின்றேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை (18) வீட்டிற்கு வந்த மேற்படி பெண், குறித்த வைத்தியர் பரமேஸ்வரா சந்தியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு வருவார் என்று கூறி, சிகிச்சை பெறுவதற்கு வரும்படி வீட்டிலிருந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.

வைத்தியசாலைக்குச் சென்றதும், மேற்படி வைத்தியரிடம் சிகிச்சை பெறும் போது நகைகள் அணியக்கூடாது எனக்கூறி, சிகிச்சைக்கு வந்த பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் காப்புக்களை வாங்கியுள்ளார்.

தொடர்ந்து, திருநெல்வேலியில் அமைந்துள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்று, வீட்டில் இருந்தவர்களிடம், சிகிச்சைக்குச் சென்றவர் தாலிக் கொடியை மறந்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அதனைத் தரும்படியும் கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இருந்த பெண், நீண்ட நேரமாகியும் வைத்தியர் வருகை தராதமையால், வைத்தியசாலை நிர்வாகத்திடம் மேற்படி வைத்தியர் எப்போது வருவார் எனக் கேட்டுள்ளார்.

எனினும், அதற்கு வைத்தியசாலை நிர்வாகம் அவ்வாறானதொரு வைத்தியர் இங்கு வருவதில்லையென கூறியுள்ளார்.

இதனையடுத்து, மேற்படி பெண் வீட்டுக்கு திரும்பிய போதே, மருத்துவதாதி போல வேடமிட்ட பெண் தன்னை ஏமாற்றியமை தெரியவந்தது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தனது 15 பவுண் தங்க நகைகள் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை கொண்டு, திருநெல்வெலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த பெண்ணை கடந்த சனிக்கிழமை (23) பொலிஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து, மேற்படி பெண் திங்கட்கிழமை (25) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதன்போதே நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேற்படி பெண் அபகரித்த நகைகளை தனியார் அடைவு நிலையமொன்றில் அடைவு வைத்து, அந்தப் பணத்தை வட்டிக்கு கொடுத்தமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Posts