Ad Widget

போர்க்குற்ற விசாரணைகளுக்காக வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப்போவதில்லை

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையானது ‘உள்ளக விசாரணையாக’ இருக்கும் என்றும் பி.பி.சிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஒக்ரோபரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் முன்னெடுப்பில் இலங்கையின் இணை-அனுசரணையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சிறப்பு நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றை நிறுவுமாறும் அதற்கு கொமன்வெல்த் உள்ளிட்ட வெளிநாடுகளின் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கையில் இன்னும் தடுத்துவைத்து சித்திரவதை செய்யும் குற்றச்சம்பவங்கள் தொடர்வதாக அண்மைக்காலங்களில் வெளியான குற்றச்சாட்டுக்களையும் இலங்கை ஜனாதிபதி மறுத்துள்ளார்.

இதேவேளை, தன்னைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் பத்தாண்டுகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் மன்னிப்பளித்து விடுதலை செய்தார்.

தான் ஒரு பௌத்தன் என்ற அடிப்படையிலேயே அவரை மன்னித்து முன்னுதாரணமாக திகழ்ந்ததாகவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவருவதாகவும் ஜனாதிபதி சிறிசேன கூறினார்.

Related Posts