Ad Widget

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில்போராட்டங்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

இலங்கையின் இறுதிப்போரில் அடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் போராட்டங்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது. இந்த தொடர்ச்சியான போராட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகைளையும் பொதுஜன அமைப்புக்களையும் மக்களையும் இணந்து கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நாளை(2) முக்கிய கூட்டம் ஒன்றை அனைத்து தரப்பினருடனும் ஏற்பாடு செய்துள்ளனர்

இதேவேளை போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் ஒன்றினை  ஆரம்பிக்கின்றனர் தொடர்ந்து   மக்கள் பேரணியை யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்து அதன் இறுதியில் கையெழுத்துப்பெறப்பட்ட மக்கள் கடிதத்தினை ஐக்கிய நாடுகள் சபைக்கு கையளிக்க உள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது!

இதுதொடர்பில் அவர்களால் பொது அமைப்புக்களுக்காக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு

தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் , மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலைக் குற்றங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் எந்த வடிவிலானதொரு உள்ளக பொறிமுறையூடான விசாரணை மூலமும் நீதி கிடைக்கப்போவதில்லை. மாறாக மேற்படி குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்றின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமக்கான நீதியை பெற்றுக் கொள்ள முடியும்.

இம்மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 வது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்தினால் உள்ளக பொறிமுறை ஒன்றினூடாக விசாரணை நடாத்தபடுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றினை கொண்டுவருவதற்கான முயற்சிகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் காரணமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச விசாரணை பொறிமுறையை வலியுறுத்துவதற்குப் பதிலாக உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தக்கூடும் என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவ்வாறு நடைபெறுமாயின் அச் செயற்பாடானது குற்றவாளியே தான்செய்த குற்றங்களை விசாரிக்க கோரும் இயற்கை நீதிக்கு முரணான நடவடிக்கையாக அமையும்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த சர்வதேச குற்றவியல் சட்ட மீறல்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச நீதிமன்ற விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என்பதனையும் எந்த வடிவிலானதொரு உள்ளக பொறிமுறை மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை என்பதனையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய அவசர தேவை அனைத்து தமிழ் மக்களுக்கும் உண்டு.

சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்தைக் ஈர்க்கும் வகையிலான கையெழுத்துப் போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் 02-09-2015 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் இல43, 3ம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் இடம்பெறவுள்ளது. மேற்படி கலந்துரையாடலில் அனைத்து பொது அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் மாணவர் அமைப்புக்கள் மற்றும் ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு கோருகின்றோம்.
-தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி –

Related Posts