Ad Widget

போர்க்குற்றங்களை மறைக்கும் ஐ.நா ஆவணம்! முதலமைச்சர் சந்தேகம்

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக எங்களின் கருத்துக்களை அறியும் ஆவணம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் போர்குற்றம் தொடர்பான எந்த விடயங்களும் இடம்பெறவில்லை.இது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற வட மாகாண சபையின் 58ஆவது அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

‘ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான புதிய வதிவிட பிரதிநிதி எமக்கு ஒரு ஆவணத்தை அனுப்பியுள்ளார். அதில் நிலைமாறுகால நீதி, அரசாங்கம், நல்லாட்சி, மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டுள்ள போதும், போர்குற்றம் தொடர்பாக எவையும் பேசப்படவில்லை. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக எனது பதிலை அனுப்பிவைக்க உள்ளேன். அதற்கு முன்னர் உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளேன். உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை குறிப்பிடலாம். அதன் அடிப்படையில் எனது பதிலை நான் அனுப்பிவைப்பேன்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தமது பிரேரணையில் கூறியிருக்கும் விடயங்கள் கூட இந்த ஆவணத்தில் இடம்பெறவில்லை. ஜக்கிய நாடுகள் சபையின் போர்குற்றங்கள் தொடர்பான விடயங்கள் கூட இந்த ஆவணத்தில் இடம்பெறவில்லை. எனினும், ஐக்கிய நாடுகள் சபை போர் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தியே ஆகவேண்டும். போர்குற்றம் தொடர்பான விசாரணைகளை எவ்வாறு மேற்கொள்வது? அதற்கான சட்டத்தை எவ்வாறு இலங்கைக்குள் கொண்டுவருவது? என்பது தொடர்பாகவும் பேசப்படவேண்டும்.

இதேபோல் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் சில விடயங்களை நிறைவுக்கு கொண்டுவர நினைக்கிறது. இதுவரை அரசாங்கம் செய்த அனைத்து விடயங்களையும் தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்ற அடிப்படையில் அதனை அரசாங்கம் செய்ய நினைக்கிறது. அதற்கு முன்னதாக இந்த ஆவணத்திற்கான பதிலை வழங்கவேண்டும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருடைய இந்த கோரிக்கை தொடர்பாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் மாற்று கருத்துக்களையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts