Ad Widget

போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

எமக்கான நீதியைப் பெறுவதற்கு சர்வதேசம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை மக்களாகிய நீங்கள் சர்வதேசத்திற்கு உறுதிபடத் தெரிவிக்க எமது போராட்டத்துக்கு ஆதரவு தாருமாறு காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஆக்கபட்டோரின் உறவுகள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் 30 ஆம் திகதி (30/08/2020) சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். எமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்துவிட்டன.

உயிருடனே கையளிக்கப்பட்ட, சரணடைந்த,கடத்தப்பட்ட, கூட்டிச் செல்லப்பட்ட, கைது செய்யப்பட்ட எமது உறவுகளின் நிலையை அறிவதற்கும், அதற்கான நீதியைக் கேட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் 20.02.2017 இலிருந்து தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நடாத்தி வருகின்றோம்.

எமக்கான நீதியை நல்லாட்சி என்று கொண்டுவரப்பட்ட மைத்திரியின் அரசு வழங்கும் என்று சர்வதேசம் கண்மூடித்தனமாக நம்பியதால் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றவென கால நீடிப்புகளை வழங்கி இழுத்தடித்ததில் எம்முடன் போராடிய 72 உறவுகளை இழந்துவிட்டோம்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் 30/1 தீர்மானத்துக்கு வழங்கிய அனுசரணையிலிருந்து விலகி தமிழர்களுக்கு நீதி வழங்கப் போவதில்லை என்பதைக் காட்டி விட்டது.

இந்நிலையில் எமக்கான நீதியைப் பெறுவதற்கு சர்வதேசம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை மக்களாகிய நீங்கள் சர்வதேசத்திற்கு உறுதிபடத் தெரிவிக்க வேண்டிய தேவையுள்ளது.

எமது உறவுகள் “ ஒரு நாளாவது விடுதலைப் போராட்டத்துக்கு பங்களிப்புச் செய்திருந்தால் சரணடையுங்கள். புனர்வாழ்வளித்து விடுதலை செய்கிறோம்” என்று அரசு கூறியதை ஏற்று சரணடைந்ததால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

உங்களின் உரிமைக்காக போராடுவதற்காக தமது இளமைக்காலத்தை அர்ப்பணித்தவர்களின் உறவுகளாகிய நாம் எமது பிள்ளைகளின் உயிருக்காகப் போராடி எமது உயிரையே விட்டுக்கொண்டு இருக்கின்றோம்.

எனவே எமக்கு நீதி கிடைப்பதற்காக சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் மத்திய பேரூந்து நிலையம் முன்பாக ஆரம்பித்து கச்சேரியடி வரையில் செல்லும் பேரணியிலும், மட்டக்களப்பில் கல்லடிப் பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரை செல்லும் பேரணியிலும் கலந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வேண்டுகின்றோம்.

அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாதலால் அனைத்துப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், மதகுருமார்கள், பொது அமைப்புக்கள், சட்டத்தரணிகள்,வர்த்தகர்கள் ,வர்த்தக ஊழியர்கள், ஆட்டோ சாரதிகள், தனியார் போக்குவரத்துப் பணியாளர்கள், விளையாட்டு கழகங்கள், சனசமூகநிலையங்கள், அனைத்தத் தொழிற்சங்க அங்கத்தவர்கள், பொதுமக்கள் , தேசியத்தை அவாவும் அனைத்துக் கட்சிகளும் அவர்களுக்கு வாக்களித்த பெருமக்களும் எமக்கு ஆதரவு தந்து எமது போராட்டத்தை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம். உங்கள் ஆதரவுடன் நாம் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு ஐநாவைக் கோருவதன் மூலமாக எமது உறவுகளுக்கான நீதியைப் பெறவேண்டும். நாமும் இறந்துபோகமுன் எமக்கான நீதி வேண்டும் இதுவே எமது கடைசி ஆசை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts